குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராட் கோலி 81 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் மற்றும் உலகளவில் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய 34ஆவது போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 100 ரன்கள் எடுத்தார். தவிர, ஐபிஎல் வரலாற்றில் பிரம்மாண்ட சாதனையும் படைத்தார். பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் விராட் கோலி மற்றும் தேவதத் படிக்கல் ஆகியோரின் அதிரடியால் 18.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
இதன்மூலம் ஆர்சிபி 5ஆவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் விராட் கோலி, 44 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் மூலம் 81 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஐபிஎல்லில் சில சாதனைகளையும் படைத்தார். முன்னதாக, விராட் கோலியின் கேட்சை வாஷிங்டன் சுந்தர் மிஸ் செய்தார். இது ஆட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஒரே நாட்டில் 10,000 டி20 ரன்களைக் குவித்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் 8,000 ரன்களைக் கடந்த முதல் வீரர். அவர், 274 போட்டிகள் மற்றும் 266 இன்னிங்ஸ்களில், 133.76 ஸ்டிரைக் ரேட் மற்றும் 39.95 சராசரியில் 8,989 ரன்களைக் குவித்துள்ளார். அவரது ரன் எண்ணிக்கையில் எட்டு சதங்களும் 66 அரைசதங்களும் அடங்கும்.
இந்த ஆட்டத்தின் மூலம், ஐபிஎல் தொடரில் 800 பவுண்டரிகளை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை கோலி படைத்தார். தற்போது அவர் 274 ஐபிஎல் போட்டிகளில் 807 பவுண்டரிகளை அடித்துள்ளார். ஷிகர் தவான் 768 பவுண்டரிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக (ஆர்சிபி) 300 சிக்சர்களை பறக்கவிட்ட முதல் வீரர். தவிர, ஐபிஎல் வரலாற்றில் 300-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். கிறிஸ் கெய்ல் (357 சிக்ஸர்கள்) மற்றும் ரோஹித் சர்மா (310 சிக்ஸர்கள்) ஆகியோர் மட்டுமே இந்த மைல்கல்லை மற்ற வீரர்கள் ஆவர்.