தொடர்ச்சியாக 2 சீசன்களில் ஆர்சிபிக்கு கோப்பை வெல்ல முக்கிய பங்கு வகித்த டிம் டேவிட், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த 2026 ஐபிஎல் இறுதியில் நடத்தை விதிகளை மீறியதால் பிசிசிஐ நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக களம்கண்ட ஆர்சிபி அணி தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு சென்றதோடு கோப்பையையும் வென்று சாதனை படைத்தது.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்திய ஆர்சிபி அணியில், ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு மேட்ச் வின்னர்கள் என பல்வேறு போட்டிகளில் 9 மேட்ச் வின்னர்கள் தனித்தனியாக உருவெடுத்தனர். கோலி, ஹசல்வுட், புவனேஷ்வர் குமார், வெங்கடேஷ் ஐயர், ஜாக்கப் டஃபி, டிம் டேவிட், ரஜத் பட்டிதார் என அனைவரும் தங்களுடைய அணிக்காக முன்னால் வந்து ஸ்டார்களாக மாறினார்.
கடந்த 2025 ஐபிஎல் சீசன் மட்டுமில்லாமல், 2026 ஐபிஎல் சீசனிலும் டிம் டேவிட் ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டர் தூணாக செயல்பட்டார். இப்படி 2 கோப்பைகளை ஆர்சிபி அணி வெல்ல காரணமாக இருந்த டிம் டேவிட்டுக்கு அடுத்த ஐபிஎல்லில் விளையாட 1 போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியின் போது, நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் பேட்ஸ்மேன் டிம் டேவிட்டுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஒரு போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது. போட்டியின் 3வது நடுவர் மீது ஐஸ்பேக்கை கொட்டியதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கட்டணத்தில் 50% சதவீதம் அபராதமும் 2 தகுதிகுறைப்பு புள்ளிகளையும் பெற்றிருக்கும் அவருக்கு, 2027 ஐபிஎல்லில் எந்த அணியில் இருந்தால் முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் நடப்பு சீசனில் 2 முறை பிசிசியால் தண்டனை பெற்ற நிலையில், மொத்தமாக அவருக்கு 5 டீமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.