ranji trophy final 2025-26 cricinfo
கிரிக்கெட்

ரஞ்சிக்கோப்பை Final| 584 ரன்கள் குவித்த ஜம்மு-காஷ்மீர்.. 57-க்கு 4 விக்கெட் இழந்த கர்நாடகா!

2025-26 ரஞ்சிக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த கர்நாடகா அணியை எதிர்த்து ஜம்மு-காஷ்மீர் அணி விளையாடுகிறது.

Rishan Vengai

ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணி 584 ரன்கள் குவித்து மிரட்டியது. கர்நாடகா 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மயங்க் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் இருவரும் கர்நாடகாவை மீட்க முயற்சிக்கின்றனர். ஜம்மு-காஷ்மீரின் பவுலர் அகிப் நபி முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிப்போட்டியில் அபாரமாக வெற்றிபெற்ற ஜம்மு-காஷ்மீர் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கும், கர்நாடகா அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்று அசத்தின.

ஜம்மு காஷ்மீர் - கர்நாடகா

இந்தசூழலில் முதல்முறையாக கோப்பை வென்று ஜம்மு-காஷ்மீர் வரலாறு படைக்குமா அல்லது 11 வருட கோப்பை வறட்சிக்கு கர்நாடாகா முற்றுப்புள்ளி எழுதுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

584 ரன்கள் குவித்த ஜம்மு-காஷ்மீர்!

கர்நாடகாவில் உள்ள ஹுப்ளி மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜம்மு-காஷ்மீர் 18 ரன்னுக்கே முதல் விக்கெட்டை இழந்து தடுமாறினாலும், அடுத்துவந்த யாவர் ஹாசன் மற்றும் சுபம் பண்டிர் இருவரும் வலுவான பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர்.

சிறப்பாக விளையாடிய ஹாசன் 88 ரன்களில் அவுட்டாக, நிதானமாக விளையாடி சதமடித்த சுபம் பண்டீர் 121 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்தடுத்து வந்த அப்துல் சமாத், கேப்டன் பராஸ் டோக்ரா, சஹில் லோத்ரா, வாதவன் என அனைத்து வீரர்களும் அரைசதம் அடித்து அசத்த முதல் இன்னிங்ஸில் 584 ரன்களை குவித்து மிரட்டியது ஜம்மு-காஷ்மீர் அணி.

தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்துவரும் கர்நாடகா அணி 57 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அக்ர்வால் 85 ரன்னிலும், ஷ்ரேயாஸ் கோபால் 24 ரன்னிலும் பேட்டிங் செய்து வருகின்றனர். கர்நாடாகா சமீபத்திய அப்டேட்டின் படி 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களுடன் விளையாடி வருகிறது.

கர்நாடகா அணியின் முக்கிய வீரர்களான கேஎல் ராகுல் 13 ரன்னிலும், ஸ்மரன் ரவிச்சந்திரன் மற்றும் கருண் நாயர் இருவரும் 0 ரன்னிலும் அவுட்டாகினர். அபாரமாக பந்துவீசிய ஜம்மு-காஷ்மீரின் நட்சத்திர பவுலர் அகிப் நபி அடுத்தடுத்த 2 பந்துகளில் கருண் நாயர் மற்றும் ஸ்மரன் ரவிச்சந்திரன் இருவரையும் டக் அவுட்டாக்கி வெளியேற்றினார்.