CSK - RCB IPL
கிரிக்கெட்

Play Off Record | சிஎஸ்கேவை நெருங்கும் ஆர்சிபி.. பிளே ஆஃப் சென்ற டாப் 5 அணிகள்!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியை வீழ்த்தியிருப்பதன் மூலம் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

Premkumar S

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், லீக் சுற்றுகளின் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. தொடக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மிரட்டலான தொடக்கத்தை பெற்று புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் போகப்போக மற்ற அணிகள் தங்களுடைய ஃபார்மிற்கு திரும்ப புள்ளிப்பட்டியலில் பரமபத விளையாட்டு நடந்துவருகிறது.

RCB

நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது நிலையான ஆட்டத்தின் மூலம் இந்த தொடரின் வலுவான அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. 12 போட்டிகளில் விளையாடிய அந்த அணி 16 பெற்றிருந்த நிலையில் தான், இன்று 61-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 222 ரன்களை குவித்தது. தொடர்ந்து, சேஸிங் செய்த பஞ்சாப் 199 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், 23 வித்தியாசத்தில் வெற்றி பெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் தொடர்வதுடன், 19வது ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சென்றிருக்கிறது.

வலுவான ரசிகர்கள் கட்டமைப்பைக் கொண்ட ஆர்சிபி 18 வருடங்களுக்குப் பிறகே, கடந்த சீசனில் தனது முதல் ஐபிஎல் கோப்பை வென்றிருந்தது. எனினும், 10 சீசன்களில் பிளே ஆஃப் சென்றிருந்ததன் மூலம் அதிக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற அணிகளின் பட்டியலில் ஆர்.சி.பி. மூன்றாவது இடத்தில் இருந்து வந்தது. 11 முறை பிளே ஆஃப்-க்கு சென்ற மும்பை இந்தியன்ஸ் இரண்டாவது இடத்திலும், 12 முறையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்திலும் இருக்கின்றன. இந்தசூழலில் தான், இந்த சீசனில் ஆர்சிபி 11வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறது.

பிளே ஆஃப் சென்ற அணிகளில், 8 முறையுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், 7 முறையுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் டாப் 5 இடங்களில் இருக்கின்றன.