நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நடப்பாண்டின், 23ஆவது காமன்வெல்த் விளையாட்டுத் திருவிழா 4ஆவது முறையாக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், 72 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 தடகள வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 125 வீரர்கள் (77 ஆண்கள், 48 பெண்கள்) 13 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், பெண்களுக்கான 53 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான ஞானேஸ்வரி யாதவ், மொத்தமாக 199 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அவர், ஸ்னாட்ச் (Snatch) பிரிவில் 88 கிலோ எடையையும், க்ளீன் & ஜெர்க் (Clean & Jerk) பிரிவில் 111 கிலோ எடையையும் தூக்கி இந்தப் பதக்கத்தை வேட்டையாடினார்.
இப்போட்டியில் அவர் பதிவுசெய்த 199 கிலோ எடையானது, பளுதூக்குதலில் அவரது சர்வதேசக் தொழில்முறை வாழ்க்கையில் மிகச்சிறந்த தனிப்பட்ட சாதனையாகும். இதே பிரிவில், நைஜீரிய வீராங்கனை ஒனோமே ஒமோலோலா டிடிஹ் (Onome Omolola Didih) மொத்தமாக 206 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். கனடா வீராங்கனை ரெபெகா க்ரூக்ஸ் (Rebeka Groulx) மொத்தமாக 178 கிலோ தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஞானேஸ்வரி யாதவ் வென்ற இந்தப் பதக்கத்தின்மூலம், 2026 காமன்வெல்த் தொடரில் இந்தியாவின் மொத்தப் பதக்க எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. நடப்பு தொடரில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைக்கும் 4-ஆவது பதக்கம் இதுவாகும். முன்னதாக மீராபாய் சானு தங்கப் பதக்கமும், ரிஷிகாந்த சிங் மற்றும் முத்துபாண்டி ராஜா ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.