2013 Champions Trophy PT
கிரிக்கெட்

2013 CT வென்ற தினம்| 'காப்பாற்ற கடவுள் வரமாட்டார்..' அழுத்தமான நேரத்தில் தோனி சொன்ன வார்த்தை!

2013ஆம் ஆண்டு இதேநாளான ஜூன் 23ஆம் தேதி இந்தியா சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று சாதனை படைத்தது.

Rishan Vengai

நீங்க செய்யவேண்டிய முதல் வேளை கவலையில் மேலே பார்க்காதீர்கள், காப்பாற்ற கடவுள் வரமாட்டார், கோப்பை வெல்லவேண்டுமானால் நீங்கள் தான் போராட வேண்டும்” - இதுதான் 2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் தோல்வியின் பக்கம் இருந்த இந்திய அணியிடம் கேப்டன் தோனி உதிர்த்த வார்த்தைகள்..

2013 சாம்பியன்ஸ் டிராபி

2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இறுதிப்பந்துவரை தோல்வியின் பக்கம் இருந்த இந்தியா, ஒரு மேஜிக் சம்பவம் நடத்திய நாள் இன்று.. எப்போதும் அமைதியாகவே இருந்து ‘கூல் கேப்டன்’ என்ற பெயரெடுத்த தோனி, அந்த வெற்றியின் போது துள்ளிக்குதித்து கொண்டாடியதை எந்த இந்திய ரசிகரால் மறக்க முடியும்..?

பரபரப்பான இறுதிஆட்டம்..

2013ஆம் ஆண்டு இதே நாளான ஜூன் 23ஆம் தேதியன்று இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் சொந்தமண்ணில் இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.

மழையால் 50 ஓவர் ஆட்டம் 20 ஓவர்களாக குறைக்கப்பட, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியால் 129 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. கோலி, தவான், ஜடேஜா 3 பேரும் பேட்டிங்கில் முக்கிய பங்காற்றினர்.

130 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இங்கிலாந்து 19.5 ஓவர் வரை தங்களுடைய பக்கமே ஆட்டத்தை வைத்திருந்தது. கடைசி ஓவரில் 15 ரன்கள் அடிக்கவேண்டிய இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தை வீச 5 பந்துகளில் 9 ரன்களை விளாசியது இங்கிலாந்து. கடைசி பந்தில் 6 ரன்கள் அடிக்கவேண்டிய நிலையில், 5 ரன்கள் அடித்தால் சூப்பர் ஓவர் அல்லது சிக்சர் அடித்து இங்கிலாந்து வெல்லுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் கடைசி பந்தை அஸ்வின் டாட் பந்தாக வீச இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

இஷாந்த் சர்மா, ஜடேஜா, அஸ்வின், கோலி, தவான் என ஒரு அணியாக அசத்திய இந்திய வீரர்கள் ஒரு மறக்கமுடியாத வெற்றியை பரிசளித்தனர். எப்போதும் கூல் கேப்டன் என்று பெயரெடுத்த மகேந்திர சிங் தோனி, அந்த வெற்றியின் தருணத்தில் துள்ளிக்குதித்தது இந்திய ரசிகர்களால் மறக்கமுடியாத தருணமாக அமைந்தது.

டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என 3 ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய அணி, உலக கிரிக்கெட்டில் தன்னுடைய ஆதிக்கத்தை தற்போதும் நிலைநாட்டி வருகிறது.

காப்பாற்ற கடவுள் வரமாட்டார்..

கோப்பை வென்றதற்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, அழுத்தமான நேரத்தின் போது இந்திய அணியிடம் என்ன பேசினேன் என்பதை வெளிப்படுத்தினார்.

தோனி

அப்போது பேசிய அவர், ““பாசிட்டிவாக இருப்பது முக்கியம். நான் அணி வீரர்களிடம் இதைத்தான் சொன்னேன், 'பந்துவீச்சில் நல்ல தொடக்கத்தை பெற முயற்சிப்போம். அது மிகவும் முக்கியமான ஒன்று. முடிவைப் பற்றி யோசிக்காதீர்கள். நீங்கள் செய்யவேண்டிய முதல் மற்றும் முக்கிய விஷயம் என்னவென்றால், கவலையில் மேலே பார்க்காதீர்கள், கடவுள் உங்களைக் காப்பாற்ற வரப்போவதில்லை. கோப்பை வெல்லவேண்டுமென்றால் நீங்கள் தான் அதை எதிர்த்துப் போராட வேண்டும். நாம் நம்பர் 1 அணி, அப்படியே விளையாடுவோம். நாம் தோற்கவேண்டுமென்றால் அவர்கள் ரன்களை அடிக்கவேண்டும், அவர்களுக்கு அதை எளிதாக்க கூடாது" என்று தோனி கூறியிருந்தார்.