U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் U19 உலகக் கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுப்போட்டிகளில் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெற்றன. இரண்டு பிரிவுகளாக சூப்பர் 6 போட்டிகள் நடைபெற்ற நிலையில், சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இந்தியா முதலிய 4 U19 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. இதில், நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், ஆஸ்திரேலியாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இந்த நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில், இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த உலகக் கோப்பையில் தோல்வியே காணாத இந்திய அணி, கடந்த காலத்தில் ஐந்து முறை (2000, 2008, 2012, 2018 மற்றும் 2022) கோப்பையை வென்று, இந்தத் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணியாகவும் திகழ்கிறது. தவிர, நான்கு முறை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்; கடைசியாக 2024-இல் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் தோற்றனர். மொத்தத்தில் இந்திய அணி, 9 முறை இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளது.
மேலும், இந்திய அணியைப் பொறுத்தவரை வைபவ் சூர்யவன்ஷி மீது அதிக கவனம் உள்ளது. அவர், மீண்டும் தனது பழைய ஃபார்முக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதிலும், இன்றைய போட்டியில் நிலையான ஆட்டத்தைத் தரவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். இன்னொரு புறம், ஆல்ரவுண்டர் விஹான் மல்ஹோத்ரா மட்டுமே இதுவரை சதமடித்த ஒரே இந்திய வீரர் ஆவார். அவரது பந்துவீச்சும் சிறப்பாக எடுபடுகிறது. ஆகையால், அவர் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தவிர, ஃபைசல் ஷினோசாதா மூன்றாவது இடத்தில் சிறப்பாக விளையாடி, இந்தத் தொடரில் இரண்டாவது அதிக ரன்கள் குவித்த வீரராக உருவெடுத்துள்ளார். அவர் 81.25 சராசரியில் 325 ரன்கள் எடுத்துள்ளார், இதில் அயர்லாந்திற்கு எதிராக அடித்த 163 ரன்களும், இரண்டு அரை சதங்களும் அடங்கும்.
அதேபோல், நூர்ஸ்தானி உமர்சாயின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. அவரி இதுவரை 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மறுபுறம், ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பையில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது; வழியில் இலங்கை அணியிடம் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றது. கடந்த 2018 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடித் தோல்வியடைந்த அந்த அணி, இம்முறை இறுதிப் போட்டிக்கு முன்னேற இலக்கு வைத்துள்ளது. அவ்வாறு அவர்கள் முன்னேறினால், அது ஒரு பெரிய உலகளாவிய போட்டியில் ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் இறுதிப் போட்டியாகவும் அமையும்.