2026 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. முன்னாள் இங்கிலாந்து வீரர், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதியில் மோதும் என எதிர்பார்ப்பதாக கூறியதால், இந்திய ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 20 அணிகளுடன் தொடங்கிய உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தின.
நேற்று நடந்த முதல் அரையிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை டாமினேட் செய்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது அரையிறுதிப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டிக்கு முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், ஞாயிற்றுக்கிழமை டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து vs இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒரு சிறந்த ஆட்டமாக இருக்கும்“ என பதிவிட்டுள்ளார். இன்றைய அரையிறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு செல்லும் என்ற கருத்தை அவருடைய பதிவு வெளிப்படுத்துவதால் இந்திய ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதற்கு முன்னர் மற்றொரு முன்னாள் ஆஸ்திரேலியா வீரரான க்ளென் மெக்ராத், ‘இங்கிலாந்து ஆபத்தான அணி என்றும், இந்தியா அவர்களை எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்றும் பேசியிருந்தார்.