இங்கிலாந்தில், புகழ்பெற்ற கவுன்டி சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த மாதம் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இந்த தொடரில், விளையாடப் பயன்படுத்தப்படும் 'டியூக்ஸ்' பந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளது. இதற்கு இஸ்ரேல் -அமெரிக்கா - ஈரான் போர் காரணமாகக் கூறப்படுகிறது.
இன்று கிரிக்கெட் நுழையாத இடமே இல்லை என்கிற அளவுக்கு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எனப் பலரும் அவ்விளையாட்டின் ரசிகர்களாக, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அதேபோல் காலத்துக்குத் தகுந்த மாதிரி கிரிக்கெட்டின் வடிவமும் மாற்றம் பெற்று வருகிறது. இந்த நிலையில், கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்திலேயே, அவ்விளையாட்டை விளையாடுவதற்கு பந்துகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது, பந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம். இங்கிலாந்தில் விரைவில் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் தொடங்க இருக்கின்றன.
அந்நாட்டின் புகழ்பெற்ற கவுன்டி சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த மாதம் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. நான்கு நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில், அடிக்கடி அணிகள் பந்துகளை மாற்ற வேண்டியிருக்கும். இந்த நிலையில், அங்கு விளையாடப் பயன்படுத்தப்படும் 'டியூக்ஸ்' பந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளது. ’டியூக்ஸ்’ பந்துகளுக்கான தோல், இங்கிலாந்தில் பதப்படுத்தப்பட்டாலும், அதைத் தைக்கும் பணிகள் இந்தியத் துணைக் கண்ட நாடுகளில்தான் நடைபெறுகின்றன.
முழுமையாகத் தயாரான ’டியூக்ஸ்’ பந்துகள் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக விமானம் மூலம் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்படும். ஆனால், மத்திய கிழக்கில் நிகழ்ந்துவரும் போர் காரணமாக, வான்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பந்து விநியோகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. விமான நிறுவனங்கள் அந்தப் பாதையைத் தவிர்ப்பதால், பந்துகளைக் கொண்டுசெல்வதற்கான போக்குவரத்துச் செலவு 3 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, 120 கிரிக்கெட் பந்துகள் கொண்ட ஒரு பெட்டிக்கு விமான நிறுவனங்கள் ஒரு கிலோவுக்கு சுமார் 5 டாலர் வசூலித்து வந்தன. ஆனால் தற்போது ஒரு கிலோவுக்கு 15 டாலர் வசூலிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள், பந்துகளும் வந்து சேரவில்லை என்கிற புகார்களும் எழுந்துள்ளன.
இதுகுறித்து டியூக்ஸ் பந்துகளைத் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் ஜஜோடியா, "தற்போதைய போர்ச் சூழலால் நாங்கள் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறோம். இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பந்துகள் தயாராக இருந்தாலும், சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், சீசனின் தொடக்கத்தில் அணிகளுக்குத் தேவையான பந்துகளில் 50 சதவீதத்தை மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த அணிகள், 50 சதவீத பந்துகளுடன் மட்டுமே வரும் சீசனைத் தொடங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இலங்கை வழியாக மாற்றுப் பாதைகளில் பந்துகளைக் கொண்டுவரவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் ’கூகபுர்ரா’ பந்துகளைப் பயன்படுத்த கவுன்டி அணிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டதால், இங்கிலாந்தில் ’டியூக்ஸ்’பந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியுள்ளது. ஏற்கெனவே, ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போரால் உலகம் முழுவதும் எரிவாயு சிக்கலைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.