ஸ்ரேயாஸ் - இஷான்
ஸ்ரேயாஸ் - இஷான் web
கிரிக்கெட்

"இந்தியாவுக்காக ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டாம்.."- இஷான் & ஸ்ரேயாஸை விளாசிய கவாஸ்கர்?

Rishan Vengai

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுடனான 2023-2024 ஆண்டுக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்தத்தை கடந்த புதன்கிழமையன்று வெளியிட்டது. வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிந்திர ஜடேஜா முதலிய 4 வீரர்கள் டாப் பட்டியலில் இணைக்கப்பட்ட அதேநேரத்தில், கடந்தாண்டு B மற்றும் C பிரிவுகளில் இணைக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் இந்தாண்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.

இது அதிகப்படியான தண்டனை!

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டதை குறிப்பிட்டு காட்டியிருந்த பிசிசிஐ, “தேசிய அணிகளில் பங்கேற்று விளையாட முடியாத போது வீரர்கள் நிச்சயம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்” என்ற பரிந்துரையையும் சுட்டிக்காட்டியது. இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ரஞ்சிப்போட்டிகளை புறக்கணித்த நிலையில், பிசிசிஐ இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

shreyas - ishan

அதேநேரம் ‘கடந்த 2023 உலகக்கோப்பை தொடரில் 530 ரன்கள் மற்றும் அரையிறுதியில் சதமடித்த ஸ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த இஷான் கிஷன் இருவரையும் ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேற்றியது பெரிய தண்டனை, வேண்டுமானால் கிரேடை குறைத்திருக்கலாம்’ என்ற கருத்தை ரசிகர்கள் வைத்துவருகின்றனர்.

ishan kishan

அதேவேளையில் ‘பிசிசிஐ செய்தது சரிதான், இல்லையேல் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டை போன்று வீரர்கள் டி20 லீக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்’ என்ற கருத்தையும் ரசிகர்கள் வைத்துவருகின்றனர்.

யார் எப்படி என்று அறிந்துகொண்டோம்! - கேப்டன் ரோகித் சர்மா

டெஸ்ட் கிரிக்கெட் மீது ஆர்வம் காட்டாத வீரர்கள் குறித்து 4வது டெஸ்ட் போட்டி முடிவுக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய கேப்டன் ரோகித் சர்மா, “டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் கடினமான வடிவம். அதில் நீங்கள் வெற்றிபெற விரும்பினால், உங்களுக்கு அந்த பசி தேவை. பசியோடு இருப்பவர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுப்போம். அப்படி பசி இல்லாத வீரர்கள், யாரும் எங்களுக்கு வேண்டாம். யார் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார்கள், யார் விளையாட விரும்பவில்லை என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்” என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.

rohit sharma

இந்நிலையில்தான் ரோகித்தின் கருத்தை சரியென சுட்டிக்காட்டி, “சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் காட்டாத வீரர்கள், ஒருபோதும் இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட மாட்டோம் என்று முடிவுசெய்து விடுங்கள்” என்ற கடுமையான கருத்தை சுனில் கவாஸ்கர் வைத்துள்ளார். குறைந்தபட்சம் இந்திய கிரிக்கெட்டுக்கு விஸ்வாசமாக இருங்கள் என்ற கூற்றையும் அவர் வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் மீது விஸ்வாசத்தோடு இருங்கள்! - சுனில் கவாஸ்கர்

ஸ்போர்ட்ஸ் டாக் உடன் பேசியிருக்கும் சுனில் கவாஸ்கர், “ரோகித் சர்மா சொல்வது சரிதான். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புபவர்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இதை நான் பல வருடங்களாக சொல்லி வருகிறேன். இந்திய கிரிக்கெட்டின் மூலம் அறிமுகமாகும் வீரர்கள், அவர்களுக்கான அங்கீகாரம் கிடைத்து அதன்மூலம் பணமும் புகழும் கிடைத்த பிறகு இந்திய கிரிக்கெட்டை மறந்துவிடுகிறார்கள். வீரர்கள் கொஞ்சமாவது இந்திய கிரிக்கெட் மீது விஸ்வாசம் காட்டவேண்டும்.

ishan kishan

ஆனால் எதோ ஒரு காரணத்திற்காக நீங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு விஸ்வாசம் காட்டாமல், 'நான் இதை விளையாட மாட்டேன், அதை மட்டும்தான் விளையாடுவேன்' என்று சொன்னால்… பசி உள்ளவர்கள், உழைப்பு போடத் தயாராக இருப்பவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுப்பதுதான் முற்றிலும் சரி. உழைப்பை போடுபவர்களுக்கு மேலும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இது தேர்வாளர்களின் அணுகுமுறையாக இருந்தால் அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது" என்று கூறினார்.

shreyas iyer

மேலும் இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் என யாரையும் குறிப்பிட்டு பேசாமல் மறைமுகமாக பேசிய கவாஸ்கர், “ஒருவேளை அவர்கள் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்திருக்கலாம், அவர்களுக்கு அதற்கான திறமையும், ரோகித் கூறியது போல் அவர்களுக்கு பசியும் கூட இல்லாமல் இருக்கலாம். அதனால்தான் அவர்கள் எந்த வகையான உள்நாட்டு கிரிக்கெட்டிலும் விளையாட விருப்பம் காட்டவில்லை. ஒருவேளை நீங்கள் ரஞ்சிக்கோப்பை போன்ற நீண்ட வடிவ சிவப்பு பந்து கிரிக்கெட்டை விளையாடவில்லை என்றால், உங்களால் எதுவும் செய்யமுடியாது” என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.