ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில், ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களது உடல்தகுதியை நிரூபித்ததால், அத்தொடரில் பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதையடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அந்த அணி பரிதாப தோல்வியைச் சந்தித்தது. தற்போது இவ்விரு அணிகளுக்கான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் 13ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த தொடரில், விளையாடுவதற்கு முன்னாள் கேப்டன்கள் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் காயம் காரணமாக விராட் கோலி விலகிவிட்டார். அவருக்குப் பதிலாக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேநேரத்தில், ரோகித் மற்றும் ஹர்திக் ஆகிய இருவரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினர். அப்போது சில போட்டிகளில் காயம் காரணமாக இருவரும் விளையாடவில்லை. இந்த நிலையில், ஆப்கானுக்கு எதிரான இந்திய அணியில் இவர்கள் இடம்பிடித்திருந்தாலும், உடற்குதியை நிரூபித்தால் மட்டுமே தொடரில் விளையாட முடியும் என பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா விளையாடுவது உறுதியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மையத்தில் அவர் உடல் தகுதிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் வலைப்பயிற்சியில், 10 ஓவர்களை முழுமையாக வீசிப் பார்த்தார். உடல் தகுதி தொடர்பான அனைத்துச் சோதனைகளிலும் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார் என பிசிசிஐ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.அவர் நேரடியாகத் தர்மசாலா செல்வாரா அல்லது சண்டிகர் முகாமில் இணைவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், அணியில் அவரது இணைவு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ரோகித் சர்மாவும் உடல் தகுதிச் சான்றிதழைப் பெற்றுள்ளார். தொடை தசைப் பிடிப்பு தொடர்பான பரிசோதனைக்காக அவர் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மையத்தில் தங்கி, உடல்தகுதியை நிரூபித்தார். இருவரும் அணிக்குத் திரும்பியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.