திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் (1012) இருந்தே பேசும் பெருமாள் ஆலயம் விளங்கி வருகிறது. இக்கோயிலில் அருள்பாலிக்கும் பெருமாள், ‘பக்தர்களிடம் பேசுபவர்’ என்று நம்பப்படுகிறது. அதனால் இந்தப் பெருமாளுக்கு ’பேசும் பெருமாள்’ என்ற பெயர் வந்தது.. அதுமட்டுமல்லாமல் இந்தப் பெருமாளுக்கு தேன் வாங்கி வைத்து படைத்து, அதனை வாய்பேசாத குழந்தைகளின் நாக்கில் தடவினால் அந்தக் குழந்தைகள் பேசுவதாக ஐதீகம்.
இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் மனக் குழப்பங்களை பெருமாளிடம் சொல்லும்போது, உடனடியாக உள்ளத்தில் ஒரு தெளிவு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அத்துடன் இந்தப் பெருமாளை வணங்கினால் திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள் விரைவில் நல்ல வாழ்க்கைத் துணை கிடைத்து வாழ்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது.
அதேபோல், குழந்தை பாக்கியம் கிடைக்காமல் தவிக்கும் தம்பதிகள் இங்கு வந்து விரதமிருந்து பெருமாளிடம் பிரார்த்தனை செய்தால், குழந்தைப் பாக்கியம் விரைவில் கிடைப்பதாக மக்கள் நம்புகிறார்கள். இக்கோயில் பெருமாளுக்கு துளசி மாலை, வெண்ணெய், பால், வெற்றிலை, பழங்கள் ஆகியவை முக்கிய நெய்வேத்தியமாக செலுத்தப்படுகின்றன.
மேலும் இந்தப் பேசும் பெருமாள் திருக்கோயில் ஒரு சாதாரண ஆலயம் அல்ல. இங்கு பக்தர்களின் கேள்விகளுக்கு பெருமாள் தெய்வீகமாக விளக்கின் சுடர் மூலம் பதில் அளிப்பதாக நம்பப்படுகிறது.. நாம் கேட்கும் கேள்விகளுக்கு ’ஆம்’ என்றால் விளக்கின் தீபச்சுடர் அசையும் என்றும் இல்லை என்றால் அந்த தீபச்சுடர் அப்படியே அசையாமல் நிற்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இங்குள்ள பெருமாள் நின்ற கோலத்தில் 12 அடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலில் தினமும் நடத்தப்படும் வழக்கமான பூஜைகள் தவிர, தமிழ்ப் புத்தாண்டு தினம், வைகாசி விசாகம், கருட சேவை, திரு ஆடிப் பூரம், கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், தீபாவளி, விஷ்ணு கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, கூடரவல்லி, தைப் பொங்கல், தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கல்யாணம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த கோயில் தினமும் திறக்கப்படும் நேரம் காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்..
இந்நிலையில் இந்த கோயிலுக்கு தற்போது ரூ.97 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோயில் அமைவிடம்:
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள கூழமந்தல் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.