மேற்கு வங்கம் Pt web
இந்தியா

மக்களாட்சியில் நீண்ட கால கம்யூனிச அரசு.. மேற்கு வங்கத்தின் அரசியல் பின்னணி!

சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கும் மேற்கு வங்க மாநிலத்தின் அரசியல் பின்னணியை சற்றே திரும்பிப்பார்க்கலாம்.

PT WEB

மேற்கு வங்கம் இந்திய அரசியலிலேயே வித்தியாசமான மாநிலம். மற்ற மாநிலங்களை போலன்றி அரசியல் நிலைத்தன்மை மிக்க மாநிலம் இது. சுதந்திரத்திற்கு பின் இம்மாநிலம் 79 ஆண்டுகளில் எட்டு முதல்வர்களை மட்டுமே கண்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் முதல்வர்கள் இருந்ததில்லை. மேற்கு வங்க மாநில அரசியலை காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் என 3ஆக பிரிக்க முடியும்.

இடதுசாரிகள்

1948 முதல் 1977 வரை காங்கிரஸ் ஆட்சி இங்கு இருந்தது. அந்த 30 ஆண்டுகளில் கடைசி சில ஆண்டுகள் காங்கிரஸில் இருந்து பிரிந்த பங்களா காங்கிரஸ், ஆட்சியில் இருந்தது. 1977இல் நெருக்கடி நிலை காலத்திற்கு பிறகு இடதுசாரிகள் முதன்முதலாக மேற்கு வங்கத்தில் அரியணை ஏறினர். ஜோதிபாசு 24 ஆண்டுகளும் அதற்குபின் புத்ததேப் பட்டாச்சார்யா 10 ஆண்டுகளும் மேற்கு வங்க முதல்வர்களாக இருந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கம்யூனிஸ அரசு ஒரு நிலப்பகுதியை இவ்வளவு நீண்ட காலம் ஆண்டது உலகிலேயே இதுவே முதல்முறை.

1960களின் மத்தியில் வங்காளத்தில் நிலவிய கடும் பஞ்சம், வேலைவாய்ப்பின்மை ஆகியவை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை தூண்டி அது நக்ஸல்பாரி இயக்கத்தின் வளர்ச்சிக்கு அடிகோலியது. இதுவே 1977இல் காங்கிரஸ் சகாப்தத்திற்கு முடிவுரை எழுதி இடதுசாரிகள் ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் நகைமுரணாக இதுபோன்ற அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களே சுமார் 34 ஆண்டு இடதுசாரி ஆட்சிக்கு முடிவுகட்டியது.

Mamata Banerjee

நந்திகிராம், சிங்கூர் போன்ற பகுதிகளில் விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளுக்கு கையகப்படுத்துவதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதை சரியாக கையாண்டு ஆட்சியை கைப்பற்றினார் மம்தா பானர்ஜி. 1977இல் தொடங்கிய இடதுசாரிகள் ஆதிக்கம் 2011இல் முடிவுக்கு வந்தது. அதிலிருந்து தற்போதுவரை மம்தாவின் ஆதிக்கமே நீடிக்கிறது. மேற்கு வங்கம் பழைய பாதையில் செல்லுமா அல்லது புதிய பாதையில் செல்லுமா என்பது மே 4ஆம் தேதி தெரியவரும்.