மேற்கு வங்கம் எக்ஸ் தளம்
இந்தியா

உள்ளாடையுடன் குற்றவாளிகள்.. ஊர்வலமாய் அழைத்துச் சென்ற போலீஸ்! புதிய பாஜக ஆட்சியின் புதுப் பயணம்!

முன்னதாக, இதேபோன்று இன்னொரு நபரும் அழைத்துச் செல்லப்பட்டார். இப்படி காவல்துறையின் நடத்தை குறித்து மாநிலத்தில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டது.

Prakash J

ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் காட்சிகள் மாறும் என்பார்கள். அதன்படி, எல்லாப் புதிய அரசுகளும் ஆரம்பத்தில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அந்த வகையில், மேற்கு வங்கத்தில் முதல்முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக, குற்றம்சாட்டப்பட்ட நபர்களை உள்ளாடைகளுடன் பொதுவெளியில் போலீசார் அழைத்துச் செல்லும் சம்பவங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு, முதன்முறையாக பாஜக அரசு அமைத்துள்ளது. அக்கட்சியின் முதல்வராக பதவியேற்ற நிலையில் சுவேந்து அதிகாரி, தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். இத்தகைய சூழலில், மாநிலத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர்களை காவல்துறையினர் உள்ளாடைகளுடன் பொதுவெளியில் அழைத்துச் சென்ற சம்பவம் பேசுபொருளாகி உள்ளது. ஹவுராவின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுபவர் ஆகாஷ் சிங்.

ஹவுராவில் மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை நடத்தி வந்ததாக இவர்மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. தவிர, காவல்துறை அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக, அவருடன் தொடர்புடைய நபர்களையும், நிலுவையில் உள்ள வழக்குகளையும் காவல்துறை தற்போது கையில் எடுத்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில், ஆகாஷ் சிங்குடன் தொடர்புடையவர்களையும் அடையாளம் காண முயன்று வருகிறது. அதன்படி, மாலிபஞ்ச்கரா மற்றும் கோலபாரி காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள், ஆகாஷ் சிங்கை விசாரணைக்காக குற்றம் நடந்த பழைய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். இந்த நடவடிக்கையின்போது, ​​பலத்த பாதுகாப்புடன் போலீசார் இருந்தபோதும், ​ஆகாஷ் சிங் பனியன் மற்றும் அரைக்கால் சட்டை மட்டுமே அணிந்திருந்தார். அந்த ஆடைகளுடன் ஹவுராவின் பல பகுதிகளுக்கும் அவர் அழைத்துச் செல்லப்பட்டது இணையத்தில் வைரலானது.

முன்னதாக, இதேபோன்று இன்னொரு நபரும் அழைத்துச் செல்லப்பட்டார். இப்படி காவல்துறையின் நடத்தை குறித்து மாநிலத்தில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டது. எனினும், மீண்டும் இவ்விவகாரம் பேசப்படும் சூழலில், சமூக ஆர்வலர்களிடம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் பாஜகவின் புதிய பரிமாணமா, புதுப் பயணமா என அவர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.