இந்தியாவின் நீண்டநாள் நட்பு நாடான ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு பதில் வெனிசுலாவின் கச்சா எண்ணெய்யை வாங்க இந்தியா முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெனிசுலா எண்ணெய் இந்தியாவுக்கு லாபமாக அமையுமா அல்லது நஷ்டத்தை ஏற்படுத்துமா என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பு அமைந்துள்ள வெனிசுலாவை ஆண்ட அதிபர் சாவேஸ், கடந்த 2017-ஆம் ஆண்டு எண்ணெய் வளத்தை தேசியமயமாக்கினார். அதோடு எந்தவொரு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனமும் அரசு நிறுவனமான PDVSA-வுக்கு 60 சதவீத பங்குகளை வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதற்கு ஒப்புக்கொள்ளாத நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா வெனிசுலா மேல் பல்வேறு தடைகளை விதித்தது. மேலும் வெனிசுலாவில் இருந்து யாரும் எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என அமெரிக்கா தடை விதிக்க, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வெனிசுலா எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்தின.
இந்தச் சூழலில் வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா கைதுசெய்த நிலையில், அங்கு அமைந்த புதிய அரசு எண்ணெய் வளத்தில் அரசின் கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. மேலும் அங்குள்ள எண்ணெய் வளங்களை அமெரிக்க கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் வெனிசுலாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே இதனை வைத்து அமெரிக்கா பல்வேறு அரசியல் விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறது. ரஷ்ய எண்ணெய்க்கு பதில் வெனிசுலா எண்ணெய்யை வாங்க வேண்டும் என அமெரிக்க அரசு இந்தியாவை வற்புறுத்தி வந்த நிலையில், அதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இதனால் ரஷ்ய எண்ணெய் அளவுக்கு வெனிசுலா எண்ணெய் இந்தியாவுக்கு லாபமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஷ்யா ஆரம்பத்தில் இந்தியாவுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கிய நிலையில், தற்போது அந்தச் சலுகைகள் குறைந்து வருகிறது. இதனால் இந்தியாவின் லாபமும் குறைந்த நிலையில், அமெரிக்கா விதித்த தடைகள் காரணமாக இந்தியாவுக்கு பல்வேறு சிக்கல்களும் எழுந்துள்ளன. எனவே ரஷ்ய எண்ணெய்க்கு மாற்றாக வெனிசுலா எண்ணெய் உருவாகும் என கருதப்படும் நிலையில், அதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்தியா ரஷ்ய எண்ணெய்யை இந்திய ரூபாயிலே வர்த்தகம் மேற்கொள்கிறது. அதேநேரம், வெனிசுலா எண்ணெய்யையை அமெரிக்க டாலரிலேயே மேற்கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். மேலும் சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு அதிகரித்தால் இந்தியாவுக்கு அதிக நஷ்டம் ஏற்படும் சூழலும் உருவாகும். வெனிசுலாவில் அந்நிய நாடுகள் நேரடியாக முதலீடு செய்து உற்பத்தியாளராக மாறலாம் என்று அமெரிக்கா அறிவித்தாலும், வெனிசுலா எண்ணெய் எடுக்கும் தொழில்நுட்பம் தற்போது அமெரிக்காவிடமே உள்ளது. இதனால் அமெரிக்க எடுக்கும் எண்ணெய்யை வாங்கி அதனைச் சுத்திகரித்து பயன்படுத்த வேண்டிய நிலை பிற நாடுகளுக்கும் ஏற்படும். ரஷ்யாவின் கச்சா எண்ணெய், யூரல்ஸ் வகையைச் சேர்ந்ததாகும். இந்த எண்ணெய் சுத்திகரிப்பதற்கு எளிதானது என்பதால் இதில் அதிக லாபம் கிடைக்கும். அதேநேரம், வெனிசுலா எண்ணெய் அதிக அடர்த்தி கொண்டது என்பதால் அதனை சுத்திகரிக்க அதிக தொழில்நுட்பமும், கூடுதல் செலவும் தேவைப்படும். இதன் காரணமாக அதனை சுத்திகரிக்க ஆகும் செலவுகள் அதிகரிப்பதால் அதில் இருந்து கிடைக்கும் லாபம் குறையும்.
மேலும், வெனிசுலா எண்ணெய் அதிக அடர்த்தி கொண்டது என்பதால் சந்தை விலையைவிட அது தள்ளுபடியிலேயே பிறநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும், தற்போது வெனிசுலா எண்ணெய் எந்த அளவு தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. தவிர, ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை கொண்டுவரும் செலவு குறைவாக இருக்கும் நிலையில், வெனிசுலா இருக்கும் தொலைவு காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர அதிகம் செலவு பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், ரஷ்ய எண்ணெய்க்கு பதில் வெனிசுலா எண்ணெய்யையை இந்தியா வாங்கத் தொடங்கினால் அமெரிக்காவின் வரி விதிப்பு குறைந்து, அது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. இதுவே இந்தியாவின் சமீபத்திய மாற்றங்களுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
எனினும் வெனிசுலாவிலோ, அமெரிக்காவிலோ ஆளும் அரசுகள் மாறி அதன் கொள்கை முடிவுகள் மாறினால், அது இந்தியாவுக்கே பேரிடியாக அமையும். வெனிசுலாவில் ஏராளமான ஆயுதக் குழுக்கள் உள்ள நிலையில், அங்கு இன்னும் முழு அமைதி திரும்பாத நிலையே உள்ளது. இதன் காரணமாகவே அமெரிக்க நிறுவனங்களான எக்ஸான் மோபில், கொனோகோ பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றன.
அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் வர்த்தக லாபத்தைக் கொண்டே ரஷ்ய எண்ணெய்க்கு பதில் வெனிசுலா எண்ணெய்யையை வாங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவுக்கு இதில் ஆரம்பத்தில் அதிக லாபம் கிடைத்தாலும் தவறான ஒரு முடிவு இந்தியாவை பெரும் பின்னடைவுக்கு கொண்டுசெல்லும். இதனால் வெனிசுலா எண்ணெய் விவகாரம் இந்தியாவுக்கு பரமபதம் விளையாட்டாகவே மாறியுள்ளது.