வெனிசுலா எண்ணெய் வயல்கள் ஓஎன்ஜிசிக்கு விற்பனை?
ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு தனது நாட்டில் உள்ள எண்ணெய் வயல்களின் ஒன்பது சதவிகிதப் பங்கை கூடுதலாக விற்க வெனிசுலா முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிசக்தித்துறையை மீட்கவும், இந்தியா உடனான உறவை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த முடிவை வெனிசுலாவின் அரசு எண்ணெய் நிறுவனமான PDVSA எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வயல்களில் ஓஎன்ஜிசிக்கு ஏற்கனவே 40 சதவிகிதப் பங்குகள் உள்ளன. மேலும் ஒன்பது சதவிகிதப் பங்குகள் கிடைக்கும் பட்சத்தில் வெனிசுலா எண்ணெய் வயல்களில் ஓஎன்ஜிசியின் பங்கு 49 சதவிகிதமாக அதிகரிக்கும். இது தொடர்பாக வெனிசுலா அரசு எண்ணெய் நிறுவனம் ஓஎன்ஜிசியுடன் தொடர்ந்து பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெனிசுலா இயற்கை எரிவாயு சட்டத்தின் படி எண்ணெய் வயல்களில் ஐம்பது சதவிதிகத்திற்கும் மேற்பட்ட பங்கை அந்நாடே வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விதிமுறை இருப்பதால், கூடுதலாக 9 சதவிகித பங்கை மட்டும் இந்தியாவுக்கு வழங்க அந்நாடு முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. உலகிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் வெனிசுலாவின் பணவீக்கம் தற்போது மூன்று இலக்கத்தை எட்டியுள்ளது. அதிலிருந்து சிறிதளவு விடுபட அந்நாட்டு அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், வெனிசுலாவில் கடும் அரசியல் நெருக்கடி நிலவி வருவதால், எண்ணெய் வயல்களில் உள்ள பங்கை பிற நாடுகளுக்கு விற்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்றும் கருதப்படுகிறது.

