Union budget 2026 Finance Minister nirmala sitharaman
இந்தியா

ரூ.200 லட்சம் கோடியை எட்டிய மத்திய அரசின் கடன்.. இதற்கு வட்டி மட்டும் எவ்வளவு தெரியுமா?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் மூலம், அரசு வாங்க முடிவு செய்துள்ள கடன் அளவு மற்றும் வாங்கிய கடனுக்கு கட்டப்படும் வட்டியின் அளவு ஆகியவை தெரியவந்துள்ளது.

Praveen Joshva L

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு நிதி பற்றாக்குறையை சமாளிக்க 17.2 லட்சம் கோடி ரூபாய் அளவு கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன்மூலம் இந்திய அரசின் கடன் அளவு 200 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் பல லட்சம் கோடி ரூபாய் அளவு வட்டி கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு வட்டிச் செலவினங்களுக்காக மட்டும் சுமார் 13.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது அரசின் மொத்த செலவில் 20 முதல் 25 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் இந்திய அரசுக்கு வரும் 1 ரூபாய் வருவாயில் 25 பைசா வரை வட்டிக்காக செலவு செய்யப்படுகிறது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், இந்திய அரசாங்கத்தின் மொத்தக் கடனில் சுமார் 95 சதவீதத்துக்கும் மேல் உள்நாட்டுக் கடனாகவே உள்ளதால் இது பெரிய அளவில் அபாயமாக மாறவில்லை.

நிர்மலா சீதாராமன்

இந்த உள்நாட்டு கடன்கள் அரசுப் பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலமும், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், LIC போன்ற காப்பீடு நிறுவனங்கள், PF போன்ற மக்களின் சேமிப்பு திட்டங்களில் இருந்தும் திரட்டப்படுகிறது. வெளிநாட்டுக் கடன் குறைவாக இருப்பதால் சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு மாறுவதால் இந்திய அரசுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை.

அதேநேரம், இந்திய அரசு செலுத்தும் கடன்களுக்கான வட்டி தொகையும் இந்தியாவுக்குள்ளேயே செலவு செய்யப்படுவதால் மக்களுக்கு மறைமுக லாபம் கிடைக்கவும் இது வழிவகை செய்கிறது. மத்திய அரசின் வருவாயில் பெரும் பகுதி வட்டி கட்டவே செல்வதால், மற்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் சவால் நீடித்து வருகிறது.

அதேநேரம், இந்திய அரசு செலுத்தும் கடன்களுக்கான வட்டி தொகையும் இந்தியாவுக்குள்ளேயே செலவு செய்யப்படுவதால் மக்களுக்கு மறைமுக லாபம் கிடைக்கவும் இது வழிவகை செய்கிறது. மத்திய அரசின் வருவாயில் பெரும் பகுதி வட்டி கட்டவே செல்வதால், மற்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் சவால் நீடித்து வருகிறது. அதேநேரம், இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்திய அரசு தனது உள்கட்டமைப்புக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் வரும்காலங்களில் இதில் இருந்து பெறப்படும் லாபம் அரசின் வருவாய்க்கு பெரிய அளவில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்மலா சீதாராமன்

மேலும், மத்திய அரசு தனது நிதிப் பற்றாக்குறையை ஜிடிபியில் 4.3 சதவீதமாகவும், கடன் இலக்கை 2031-ஆம் ஆண்டுக்குள் கடன் - ஜிடிபி விகிதத்தை 50 சதவீதம் ஆக குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. இது தவிர, மத்திய அரசின் கடனோடு, மாநில அரசுகளின் கடனும் சேர்ந்தால் அந்த கடன் விகிதம் 300 லட்சம் கோடி அளவு அதிகரித்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்திய அரசின் கடன் விகிதம் பல்வேறு வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது பாதுகாப்பான அளவிலேயே உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.