உத்தரகாண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய இடம் தீட்டுப்பட்டதாகக் கூறி, கங்கை நீர் தெளித்து சுத்திகரிப்பு செய்யப்பட்ட சம்பவம் தேசிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த அதிர்வலைகளே இன்னும் ஓயாத நிலையில், அதேபோன்றதொரு சம்பவம் தற்போது தெலங்கானாவிலும் அரங்கேறியிருப்பது, சாதிய பாகுபாடு குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் சந்திரசேகர் ராவ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வருகிறார். இந்தச்சூழலில் தான், கடந்த செப்டம்பர் 7 நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவையின் போது, காங்கிரஸ் கட்சியின் சபாநாயகர் கத்தம் பிரசாத் குமாரை பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 8-ம் தேதி பி.ஆர்.எஸ் எம்.எல்.சி.க்களான டாடா மதுசூதன் மற்றும் நவீன் குமார் ஆகியோர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சபாநாயகரை அவமதித்ததுடன், சபாநாயகர் பதவிக்கு உரிய கண்ணியத்தை அவமதித்ததாகவும் கூறி, சித்திபேட் மாவட்டத்தில் உள்ள எர்ரவல்லி பகுதியில், பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவின் பண்ணை வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கு “தப்பு” எனப்படும் பாரம்பரிய மேளத்தை அடித்து எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச்சூழலில் தான், போராட்டம் நடந்த அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 9-ம் தேதி அதே இடத்தில் பிஆர்எஸ்-ஐச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் சிலர், அந்த இடத்தையும் சாலையையும் “தூய்மைப்படுத்தும் சடங்கு” நடத்தியுள்ளனர். இந்நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் அப்பகுதிக்கு சென்றதால், அந்த இடம் தீட்டுபட்டுவிட்டது என்று கருதியதாலேயே ‘தூய்மைப்படுத்தும் சடங்கு’ நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தச் சம்பவம் தான், தற்போது தெலங்கானா அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. பட்டியல் சமூக மக்கள் சென்ற இடத்தை அவர்கள் சென்ற பிறகு “தூய்மைப்படுத்துவது” என்பது சாதிய பாகுபாட்டை வெளிப்படுத்தும் செயல் என்றும், இது தலித் மக்களின் சுயமரியாதையை அவமதிக்கும் செயல் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
தெலங்கானா துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்காவும் இந்தச் சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார். பட்டியல் சமூக மக்களின் சுயமரியாதையை மட்டுமல்ல... ஒட்டுமொத்த தெலங்கானா சமூகத்தின் சுயமரியாதையையும் இந்தச் சம்பவம் காயப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற நிலப்பிரபுத்துவ மற்றும் சாதிய பாகுபாடு கொண்ட சிந்தனைகளை தெலங்கானா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, இந்தச்சம்பவம் குறித்துப் பேசியுள்ள முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், தேவையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தை விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.