உச்ச நீதிமன்றம், வக்ஃப் எக்ஸ் தளம்
இந்தியா

வக்ஃப் சட்டம் | மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி! உச்ச நீதிமன்றத்தில் நடந்த காரசார விவாதம் - முழுவிபரம்

வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக 100க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அம்மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

PT WEB

வக்ஃப் வாரியத்தில் பல்வேறு மாற்றங்களைச் சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை உருவாக்கிய மத்திய அரசு, அதை சமீபத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது இரு அவைகளிலும் நிறைவேற்றியது. தற்போது குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில் சட்ட வடிவம் பெற்றுள்ளது. இதற்கிடையே இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மறுபுறம், உச்சநீதிமன்றத்திலும் இந்த மசோதாவுக்கு எதிராக 70க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த நிலையில், இம்மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

சஞ்சீவ் கண்ணா

அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ”அனைத்து மனுதாரர்களின் கோரிக்கைகளும் கேட்கப்படும். ஒவ்வொருவருக்கும் வாதிட வாய்ப்பு வழங்கப்படும். இந்த வழக்கின் சாரம் மற்றும் வாதக் குறிப்புகள் தொடர்பாக முதலில் எடுத்துரைக்க வேண்டும். இது வழக்கின் முதல்கட்ட விசாரணையே. எனவே வாதத்தின் crux-ஐ எடுத்து வைக்க வேண்டும். பட்டியலிடப்பட்ட மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமா அல்லது சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பலாமா? ஒவ்வொரு மனுதாரர்களும் எந்தப் புள்ளியில் வாதத்தை முன் வைக்க உள்ளீர்கள்” எனக் கேள்வி எழுப்பிய அவர், இரண்டாவது கேள்விக்கு மனுதாரர்கள் தரப்பு அளிக்கும் பதிலை பொறுத்து முதல் கேள்வியை முடிவு செய்யலாம்” என்றார்.

இதற்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “ஒரு சொத்தை வக்ஃப்வுக்கு வழங்க வேண்டும் என்றால், ஒருவர் 5 ஆண்டு இஸ்லாம் மதத்தைப் பின்பற்ற வேண்டும் என புதிய சட்டம் கூறுகிறது. ஆனால், அரசியல் சாசனம் ஒரு மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் வழங்கியுள்ளது. ஒவ்வொரு மத நிறுவனங்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் தனித்தனி அதிகாரங்கள் உள்ளன. எந்த ஒரு சட்டமும் அரசியல் சாசன பிரிவு 25, 26க்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். எந்த ஒரு சொத்தையும் வக்ஃப் சொத்து என்று அறிவிக்க முடியாது. அதற்கு என்று வழிமுறைகள், விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக, எந்தப் பழங்குடியின மக்களின் சொத்தையும் வக்ஃப் சொத்து என அறிவிக்க முடியாது. மேலும் ஒரு மதக்குழுவின் சொத்து, நிறுவனங்களை நிர்வகிக்க அந்தக் குழுக்களைச் சேர்ந்தவர்களே நிர்வாகியாக இருக்க வேண்டும். வக்பு உறுப்பினர்களாக இதுவரை இஸ்லாமியர்களாவே இருந்து வருகின்றனர். இந்து மற்றும் சீக்கிய அமைப்புகளிலும் அதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.

இது 20 கோடி இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை சார்ந்தது. ஆனால் புதிய சட்டத்திருத்தத்தில் யாரை வேண்டுமானாலும் நிர்வாக உறுப்பினராக நியமிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. வக்ஃப் வாரியத்தில் பிற மதத்தினரை நிர்வாகிகளாக நியமிப்பது என்பது நேரடி விதி மீறல் ஆகும். 1995 வக்ஃப் சட்டம் இஸ்லாமியர்களால் நிர்வகிக்க அதிகாரம் வழங்கி உள்ளது. அதனை முழுமையாக மாற்றும் விதமாக தற்போதைய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் வக்பு சொத்துக்கள் மீது முடிவு செய்வது என்பது நீதித்துறை முடிவாகாது” என வாதம் வைத்தார்.

கபில் சிபல்

இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “சுமார் 8 லட்சத்துக்கும் மேலான வக்ஃப் சொத்துக்கள் உள்ளன. அதனை மொத்தமும் கையகப்படுத்தும் வகையிலேயே தற்போதைய சட்டத் திருத்தம் உள்ளது” என்றார்.

இதற்கு தலைமை நீதிபதி, “டெல்லி உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல அரசு சொத்துக்கள் வக்ஃப் சொத்துக்கள் கூறுவது எப்படி” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “நாடாளுமன்றக் கட்டடம்கூட வக்ஃப் சொத்து என கூறுகின்றனர். இது அனைத்தும் கட்டமைக்கப்பட்ட கதை. அவ்வாறு எதை வேண்டுமானாலும் வக்ஃப் சொத்து என உரிமை கோர முடியாது. மேலும் சில விசயத்தில் பிரச்னைகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. அதற்காக அனைத்தையும் குறைகூறுவதை ஏற்க முடியாது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு வக்ஃப் சொத்து உருவாக்கப்பட்டால், அதற்கு பத்திரத்தை காண்பிக்கும் நிலை தற்போது உருவாகி உள்ளது. பல வக்ஃப் சொத்துக்கள் பதிவு செய்யப்படாதவை. வக்ஃப் என்பது மிகமிகப் பழமையானது.

இது அயோத்தியா வழக்கு தீர்ப்பிலும் விவாதிக்கப்பட வேண்டியது. வக்ஃப் சொத்து இவை என்பதை ஆட்சியர்கள் முடிவு செய்வது இயலாத காரியம். அதில் பல பிரச்னைகள் உள்ளன. 5 ஆண்டுகள் மதத்தைப் பின்பற்றினால்தான் நன்கொடை வழங்க முடியும் என்பது ஏற்புடையது அல்ல. இது தனி உரிமைகளுக்கு எதிரானது. வக்ஃப் சட்ட விவகாரம் நாடுமுழுதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. எனவே, இந்த மனுக்களை உயர்நீதிமன்றங்கள் விசாரிப்பது சரியாக இருக்காது” என்றார். முன்னதாக, ”ஏன் உயர் நீதிமன்றம் வழக்கை விசாரிக்கக்கூடாது” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்

தொடர்ந்து வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ”வக்ஃப் சட்டத் திருத்தத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய திருத்தங்கள் உள்ளன. அவை குறிப்பட்ட இந்த மதத்தினரை ஒடுக்குவதாக உள்ளது. எனவே, அதற்குத் தடை விதிக்க வேண்டும். சட்டமே முழுவதும் தவறு என்று கூறவில்லை. மாறாக, ஒரு குழுவினரின் உரிமையைப் பாதிக்கும் வகையிலான விசயங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” என வாதம் வைத்தார்.

தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “வக்ஃப் என்பது இஸ்லாம் மதத்தோடு ஒருங்கிணைந்த விவகாரம். தொண்டு என்பது இஸ்லாம் மதத்தில் அவசியமானது. அது அந்த மதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அதனை மாற்றுவது அரசியல் சாசனம் வழங்கி உள்ள உரிமை மீதான தாக்குதல்” என்றார்.

அபிஷேக் சிங்கி

அடுத்து தி.மு.க தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன், ”வக்ஃப் புதிய சட்டத்தின்படி, ஒரு நபர் தான் ஓர் இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க 5 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இது எந்த வகையில் நியாயமானது, இது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. வக்ஃப் சட்டம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. அரசியல் சாசனம் 26, 300A பிரிவுகளுக்கு எதிரானது. 5 ஆண்டுகள் மதத்தை பின்பற்றினால்தான் நன்கொடை வழங்க முடியும் என்பது மத உரிமைகளுக்கு எதிரானது. வக்ஃப் புதிய சட்டம் இஸ்லாமியர்களை 5 ஆண்டுகள் நன்னடத்தை என்ற ஒரு விதியை விதிக்கிறது. ஒரு மதக் குழுச் சொத்துக்களை வாங்கவும், வைத்திருக்கவும் அனுமதிக்கும் பிரிவு 26(c)ஐ விதி மீறுகிறது. இவ்வாறு இந்த உரிமைகளை கட்டுப்படுத்த ஒரு சட்டம் இயற்றுவது என்பது பொது ஒழுங்குப் பிரச்னை. சுகாதார பிரச்னை மற்றும் ஒழுக்கத்திற்கு எதிரானதாக இருந்தால் மட்டுமே இயற்ற முடியும்” என்றார்.

மூத்த வழக்கறிஞர் ஹசிஃபா அகமதி, ”ஒருவர் 5 ஆண்டுகள் பின்பற்றினால்தான் இஸ்லாமியன் என்ற ஒரு தோரணையிலான சரத்து சுதந்திரமாக மதத்தைப் பின்பற்ற அரசியல்சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது” என்றார்.

மத்திய அரசின் சொலிசிட்டர் துஷார் மேத்தா, “நாடாளுமன்றக் கூட்டுக்குழு பல ஊர்களுக்குச் சென்று விரிவாகக் கருத்து கேட்டு பின்னர் தான் சட்டம் இயற்றப்பட்டது” என்றார்.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம், “இந்து அறநிலையத்துறை சட்டத்தின்படி, இந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும். அப்படி இருக்கும்போது வக்ஃப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை. பயனாளிகளால் அல்லது வக்ஃப் தீர்ப்புகளால் வக்ஃப் சொத்துக்கள் என நிறுவப்பட்டால் அது செல்லாது என்று கூறுகிறார்களா? அந்த நடைமுறை தற்போதைய சட்டப்படி தொடர முடியுமா, முடியாதா? ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்புவரை சொத்துக்களை பதிவுசெய்யும் நடைமுறை இல்லை.

14, 17 நூற்றாண்டுகளில் உள்ள சொத்துக்கள்கூட வக்ஃப் சொத்துக்களாக உள்ளன. உதாரணத்துக்கு, ஜம்மா மசூதி உள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத் துறை, திருப்பதி தேவசம் போர்டு உள்ளிட்ட இந்து கோயில் நிர்வாக அமைப்பில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளனரா?மாவட்ட ஆட்சியர் வக்ஃப் சொத்தை முடிவு செய்வது நியாமனதா? வக்ஃப் சொத்தை ஒருவர் பதிவு செய்ய வரும்போது, அது அரசு நிலம் என்று அரசு கூறினால் என்ன நடக்கும்? வக்ஃப் சொத்து என்பதை ஏன் நீதிமன்றம் முடிவு செய்ய அனுமதிக்கக்கூடாது” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு வழக்கறிஞர் துஷார் மேத்தா, ”வக்ஃப் பதிவு எப்போதும் கட்டாயமாக இருந்தது. வக்ஃப் என்பது பதிவு செய்யப்பட வேண்டியிருந்தது. 1995 சட்டத்திலும் அது கட்டாயமாகும். மேலும் வக்ஃப் சொத்து பதிவு செய்யப்படாவிட்டால், அவர் 1995 சட்டத்தின்படி சிறைக்குச் செல்கிறார்” எனத் தெரிவித்தார்.

துஷார் மேத்தா

இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, “வக்ஃப் சொத்து எது என்று ஆட்சியர் அதை முடிவு செய்யத் தொடங்கும்போது, அது வக்ஃப் சொத்து என்பதை தடுக்கிறது. பயன்பாட்டையும் நிறுத்துகிறதே. இது நியாயமா” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு துஷார் மேத்தா, “அதன் பயன்பாடு நிறுத்தப்படவில்லை வக்ஃப் என்ற அந்தஸ்து மட்டுமே தடுத்து நிறுத்தப்படுகிறது. குறிப்பாக, அந்த நிலம் வக்ஃப் சொத்தாக இருப்பதை தடுக்கிறது” என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி, “அப்படியெனில், அந்தச் சொத்தில் இருந்து வரும் வாடகை யாரிடம் எங்கே செலுத்தப்படும்? இவ்வாறு தெளிவு இல்லையெனில் ஏன் இந்த ஏற்பாடு? வக்பு நன்கொடை மூலம் பெரும் சொத்தைப் பதிவு செய்வது கடினம். எந்த ஒரு நீதிமன்றத் தீர்ப்பையும் செல்லாது என்று நாடாளுமன்றத்தால் அறிவிக்க முடியாது. பயனாளிகள் அடிப்படையிலான வக்ஃப் சொத்துக்களை நீக்கினால் அது பிரச்னையாக இருக்கும்” எனக் கருத்து தெரிவித்தார்.

இனிமேல் இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாறியங்களில் அனுமதிப்பீர்களா? இதற்கு வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டும் - மத்திய அரசு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பினர். அத்துடன், உச்ச நீதிமன்றமே மனுக்கள் மீது முடிவு செய்ய வேண்டுமா? பொது உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமா என்று நீதிபதிகள் கருத்து கேட்டனர்.

உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றமே வழக்கை விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்த நிலையில், வக்பு வாரியத்தில் 2 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம் செய்வது செல்லும் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் உச்சநீதிமன்றம் தமது உத்தரவில்..

  • வக்பு என்று அறிவிக்கப்பட்ட எந்த சொத்துக்களும், பயனரால் வக்பு ஆக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவை வக்பு அல்லாததாக கருதப்படாது

  • ஆட்சியர் நடவடிக்கைகளைத் தொடரலாம், ஆனால் இந்த விதி அமலுக்கு வராது.

  • வக்பு வாரியம் மற்றும் கவுன்சிலைப் பொறுத்தவரை, 2 (ex officio) அதிகாரபூர்வ உறுப்பினர்களை நியமிக்கலாம்.

  • ஆனால் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் இஸ்லீமியர்கள் மட்டுமே.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்...

மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தி வழக்கு நாளை பிற்பகம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் நாளை வரை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.