இந்தியாவில் தெருநாய்கள் பற்றிய முறையான தரவுகள் இல்லை என்ற வாதம் நீதிமன்றங்களில் முன்வைக்கப்படும் நிலையில், அது உண்மையல்ல என்கிறார் பேராசிரியர் கிருத்திகா ஸ்ரீனிவாசன். புள்ளிவிவரங்களின்படி, 2012 முதல் 2019ஆம் ஆண்டுக்குள் தெருநாய்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், 2003உடன் ஒப்பிடும்போது 2022இல் ரேபிஸ் உயிரிழப்புகள் 90 சதவீதம் சரிந்துள்ளன. அப்படியென்றால் மோதல்கள் ஏன் அதிகரிக்கின்றன? இதற்கு முக்கியமான காரணமாக 'உணவளிக்கும் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்' சுட்டிக்காட்டப்படுகிறது. முன்பெல்லாம் நாய்கள் சிதறிக்கிடக்கும் உணவைத் தேடி உண்டு வந்தன. ஆனால், இப்போது ஒரே இடத்தில் மொத்தமாக உணவளிப்பதன் மூலம் நாய்களின் இயல்பான நடத்தை மாறுகிறது.
நாய்கள் குறிப்பிட்ட இடத்தோடும், நபரோடும் அதிக பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதால், அந்தப் பகுதிக்குள் வரும் அந்நியர்களைக் கண்டு ஆக்ரோஷமாக குரைக்கவும், துரத்தவும் செய்கின்றன. எனில், உச்ச நீதிமன்றத்தின் இடமாற்ற உத்தரவு தீர்வாகுமா? ரயில் நிலையங்கள் போன்ற இடங்களிலிருந்து நாய்களை அகற்றுவது 'குழப்ப விளைவை' ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். உச்ச நீதிமன்றம் மற்றும் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் விதிமுறைகள்படி, தெருநாய்களைக் கொல்வதோ அல்லது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அப்புறப்படுத்துவதோ சட்டப்படி குற்றமாகும். மேலும் நாய்களை ஓர் இடத்தில் இருந்து அகற்றினால், அந்த இடத்திற்குப் புதிய நாய்கள் வந்துசேரும் வாய்ப்புகளும் உள்ளன. இதனால் இது ஒரு வெற்றிகரமான நடவடிக்கைக்கு பதிலாக மோதல்களை இன்னும் அதிகரிக்கும்.
இந்நிலையில் தெருநாய் பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன? இதற்கு தீர்வு 'கருத்தடை மற்றும் வெறிநாய் தடுப்பூசி திட்டம் மட்டுமே. நாய்களைப் பிடித்து, அறுவை சிகிச்சை செய்து, அதே இடத்தில் மீண்டும் விடுவதன் மூலம் அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப்படுவதுடன், நாய்களின் ஆக்ரோஷமும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. இருப்பினும் வெறும் கருத்தடை மட்டும் போதாது என அறிவுறுத்தும் நிபுணர்கள் நாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை முறைப்படுத்த வேண்டும் எனவும், ஒரே இடத்தில் உணவைக் குவிக்காமல், அவை தேடி உண்ணும் சூழலை உருவாக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் மக்களும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து செயல்படுவதன் மூலமே தெருநாய் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை பெற முடியும்.