ஞானசேகரன் pt desk
இந்தியா

ஞானசேகரன்-க்கு இப்படியொரு க்ரைம் பின்னணியா? | தொடர் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்கள்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் குறித்து வெளியாக அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெ.அன்பரசன்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஞானசேகர் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில் இவ்வழக்கை விசாரிக்க 3 ஐ.பி.எஸ் பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழுவினர் முதற்கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று சம்பவம் நடந்த இடம் மற்றும் சிசிடிவி இருக்கக்கூடிய இடம் என அனைத்தையும் ஆய்வு செய்து விவரங்களை சேகரித்துள்ளனர்.

ஞானசேகரன்

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்து போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஞானசேகரன் பூட்டி இருக்கும் வீடுகளை தொடர்ச்சியாக நோட்டமிட்டு ஜீப் மூலமாகவே சென்று கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதையும், அங்கு இருக்கக்கூடிய பெண்களை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இவர் மீது பள்ளிக்கரணை, அமைந்தகரை, மைலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளை அடித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இது குறித்து விசாரித்த போது போலீசாருக்கு மற்றொரு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.

கடந்த சில மாதங்களாக சென்னையில் கைவரிசை காட்டாமல் ஞானசேகரன் பள்ளிக்கரணை பகுதியில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்ததாகவும், பள்ளிக்கரணை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து ஞானசேகரனை தேடி வந்ததாகவும் தெரிகிறது. இதற்கிடையில்தான், ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது கொள்ளை வழக்கை விசாரித்துவந்த போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைத்தான ஞானசேகரன்

மேலும், ஞானசேகரன் தொடர்ச்சியாக தனிமையில் இருந்த ஜோடிகளை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஞானசேகரன் இரண்டு செல்போன்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ள நிலையில் அதில் கடந்த ஆறு மாத கால் ஹிஸ்டரியை போலீசார் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

சைபர் ஆய்வகத்தில் ஞானசேகரனின் செல்போன் கொடுத்து அதிலிருந்து ஆபாச வீடியோக்களை போலீசார் ரெக்கவரி செய்த நிலையில் வாட்ஸ் அப் சாட்டுகளையும் ஆய்வு செய்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"யார் அந்த சார்?" என்ற கேள்வி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ஞானசேகரன் செல்போனை ஆய்வு செய்தால் சந்தேகங்கள் தீர்க்கப்படும் என்ற அடிப்படையில் கால் ஹிஸ்டரியை எடுப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஞானசேகரன் மிரட்டி எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றவர்களுக்கு பகிரப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஞானசேகரன் கொள்ளையடித்த பணத்தில் பண்ணை வீடு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

ஞானசேகரனை போலீஸ் காவல் எடுத்தால் தான் அது குறித்து முழுமையான தகவல் தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.