இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, இந்தியாவுக்கு மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக வந்துள்ளார். இது, அவருக்கு முதல் வெளிநாட்டுப் பயணம். இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடியைச் சந்தித்து திசநாயக பேசினார். பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர், மீனவர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருதரப்பு உறவு குறித்து இருவரும் உரையாடினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலங்கை அதிபராகப் பதவியேற்ற பிறகு, இது எனது முதல் வெளிநாட்டுப் பயணம். எனது முதல் வெளிநாட்டுப் பயணமாக டெல்லிக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வழிவகுத்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை, பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதிலிருந்து மீள்வதற்கு இந்தியா எங்களுக்கு பெரிதும் ஆதரவளித்தது.
இருநாடுகளுக்கும் பாதிப்பாக மாறியுள்ள மீனவர் பிரச்னைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் ஆழ்கடலில் இருக்கும் மீன்களைப் பிடிக்கும் முறையைப் பின்பற்றுகிறார்கள். அது, மீன்பிடித் தொழிலுக்கு அழிவை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, “இலங்கைக்கு இந்தியா இதுவரை 5 பில்லியன் டாலர்கள் கடன் மற்றும் மானிய உதவிகளை வழங்கியுள்ளது. மேலும் வீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன், இலங்கையில் விவசாயம், பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா ஒத்துழைக்கும். இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள திட்டத்தில் இந்தியாவும் பங்கேற்கும். இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்தியா விரைவில் இறுதி செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகவிடம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 2024ஆம் ஆண்டு இதுவரை 537 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் வலியுறுத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்துயுள்ள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.