epfo google gemeni
இந்தியா

PF தொகையில் அதிரடி மாற்றம்.. ரூ.25,000 வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ்!

நிறுவனங்கள் தங்களின் பங்களிப்புத் தொகையையும் உயர்த்த வேண்டியிருக்கும் என்பதால் நிர்வாகத்திற்கான சமூகப் பாதுகாப்புச் செலவினங்கள் அதிகரிக்கும்.

Prakash J

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கட்டாயப் பிடித்தத்திற்கான மாத ஊதிய உச்ச வரம்பை ₹15,000-லிருந்து ₹25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2014-க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றத்தின் மூலம் சுமார் 51 லட்சம் ஊழியர்கள் புதிதாகச் சமூகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுகின்றனர்

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வுக்காலத்திற்காக EPFO என்னும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி பிடித்தம் செய்யப்படும். அதேபோல நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்குவர். இதற்கு வட்டியும் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், EPFO ​​அமைப்பை வங்கி செயல்முறையைப் போல் மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வங்கி செயல்பாடுகள் ஆன்லைனில் எவ்வாறு நடத்தப்படுகிறதோ அதேபோல, எதிர்காலத்தில் EPFO ​​தொடர்பான அனைத்துப் பணிகளும் ஆன்லைனில் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

epfo

இந்த நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கட்டாயப் பிடித்தத்திற்கான மாத ஊதிய உச்ச வரம்பை ₹15,000-லிருந்து ₹25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுவரை மாதம் 15ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெற்றவர்கள் பிஎஃப் திட்டத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்ட நிலையில், அதற்கு மேல் பெறுபவர்கள் சேருவது அவரவர் விருப்பமாக இருந்தது. அந்நிலை மாறி 25 ஆயிரம் ரூபாய் வரை வாங்குபவர்கள் இனி கட்டாயமாக பிஎஃப் திட்டத்தில் சேர்க்கப்படுவர். இதன்மூலம் கூடுதலாக 51 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் கட்டாய சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய வலையமைப்பிற்குள் கொண்டுவரப்படுவார்கள். 12 ஆண்டுகளுக்கு பின்பு இந்த உச்ச வரம்பு உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள ஊதிய உயர்வு, வருமானம் அதிகரிப்பு மற்றும் முறையான வேலைவாய்ப்புகளின் விரிவாக்கம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

epfo

இத்திட்ட விரிவாக்கத்திற்காக மத்திய அரசு ஆண்டுதோறும் சுமார் ₹11,339 கோடி வரை கூடுதல் நிதியைச் செலவிடவுள்ளது. மறுபுறம், ₹15,000-க்கு மேல் ஊதியம் பெற்று இதுவரை PF பிடித்தம் செய்யப்படாத ஊழியர்களுக்கு, இனி 12% PF பிடித்தம் செய்யப்படும் என்பதால் கையில் கிடைக்கும் நிகரச் சம்பளம் சற்று குறையக்கூடும். எனினும், ஊழியர்களின் ஓய்வுகாலச் சேமிப்புத் தொகையும் ஓய்வூதியத் தகுதியும் கணிசமாக அதிகரிக்கும். மேலும், நிறுவனங்கள் தங்களின் பங்களிப்புத் தொகையையும் உயர்த்த வேண்டியிருக்கும் என்பதால் நிர்வாகத்திற்கான சமூகப் பாதுகாப்புச் செலவினங்கள் அதிகரிக்கும்.