அடேங்கப்பா.. இத்தனை கோடியா? EPFO-இல் முடங்கிக் கிடக்கும் 31 லட்சம் கணக்குகளின் தொகை.. RTI தகவல்!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம், நாடு முழுவதும் உள்ள 30.91 லட்சம் செயல்படாத EPF கணக்குகளில் ரூ. 9,330 கோடிக்கும் அதிகமான தொகை முடங்கிக் கிடப்பது தெரியவந்துள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வுக்காலத்திற்காக EPFO என்னும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி பிடித்தம் செய்யப்படும். அதேபோல நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்குவர். இதற்கு வட்டியும் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், EPFO அமைப்பை வங்கி செயல்முறையைப் போல் மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வங்கி செயல்பாடுகள் ஆன்லைனில் எவ்வாறு நடத்தப்படுகிறதோ அதேபோல, எதிர்காலத்தில் EPFO தொடர்பான அனைத்துப் பணிகளும் ஆன்லைனில் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது EPF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது என்பது ஒரு நீண்ட செயல்முறையைக் கொண்டது.
EPFO பயனர்கள் தற்போது பணத்தை எடுக்க வேண்டும் எனில், முன்கூட்டியே ஆன்லைனில் விண்ணப்பம் செய்து காத்திருந்தால் அவர்களது வங்கிக் கணக்கிற்கு பணம் வரும். இத்தகைய சூழலில், EPFO 3.0 என்ற புதிய திட்டத்தின் மூலம் PF கணக்கில் இருக்கும் பணத்தை ATM மூலம் எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன்மூலம் பணத்தை அணுகுவது விரைவாகவும் எளிமையாகவும் மாறும். தவிர, ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS-95)கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்துவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில், 31 லட்சம் இபிஎஃப் கணக்குகளில் ரூ.9,300 கோடிக்கும் அதிகமான தொகை உரிமை கோரப்படாமல் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ’இந்தியா டுடே’ ஊடகம் பிரத்யேகமாகப் பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம், நாடு முழுவதும் உள்ள 30.91 லட்சம் செயல்படாத EPF கணக்குகளில் ரூ. 9,330 கோடிக்கும் அதிகமான தொகை முடங்கிக் கிடப்பது தெரியவந்துள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கூற்றுப்படி, மார்ச் 31, 2026 நிலவரப்படி, சுமார் ரூ. 9,330 கோடி உரிமை கோரப்படாத நிலுவைத் தொகையுடன் 30,91,862 செயல்படாத இபிஎஃப் கணக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
செயல்படாத இபிஎஃப் கணக்குகளின் எண்ணிக்கை, மார்ச் 31, 2025 அன்று 31.83 லட்சமாக இருந்ததிலிருந்து, ஓராண்டு கழித்து 30.91 லட்சமாக, அதாவது சுமார் 92,000 குறைந்திருந்தாலும், உரிமை கோரப்படாத தொகை 10,181 கோடியிலிருந்து 9,330 கோடியாக, அதாவது 851 கோடி குறைந்துள்ளது. இந்தச் சரிவு, இருந்தபோதிலும், கிட்டத்தட்ட 31 லட்சம் கணக்குகள் செயல்படாமல் இருப்பதும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான தொழிலாளர்களின் ஓய்வூதிய சேமிப்புகள் இன்னும் உரிமை கோரப்படாமல் இருப்பதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் இபிஎஃப் கணக்குகளில் உள்ள ரூ.9,330 கோடியானது, 2016-ல் தொடங்கப்பட்ட 'உடான்' மண்டல இணைப்புத் திட்டத்திற்காக மத்திய அரசு செலவழித்த ரூ.10,169 கோடிக்கு ஏறக்குறைய சமமாகும். இது, ஆயுஷ்மான் பாரத்–பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்திற்காக மத்திய அரசு 2026-27-ல் ஒதுக்கிய நிதிக்கு ஏறக்குறைய சமமானதாகும் என இந்தியா டுடே ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

