செய்தியாளர் - M. மீரா
பஜ்ஜி, வடை, போண்டா போன்ற உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் பார்சல் செய்ய வேண்டாமென, உணவு வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தாலும் அதனை உணவு கடை உரிமையாளர்கள் அதனை முறையாக பின்பற்றுவதில்லை என புகார்கள் எழுந்ததையடுத்து இந்த உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அச்சு மை இல் உள்ள நச்சுத்தன்மை மற்றும் சுகாதாரமற்ற கையாளுதல் ஆகியவற்றால் ஏற்படும் தீவிர உடல்நலப் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி, உணவுப் பொருட்களைப் பொதியிடவோ, சுற்றவோ அல்லது பரிமாறவோ செய்தித்தாள்களைப் பயன்படுத்தக்கூடாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
செய்தித்தாள்களில் எண்ணெய் பதார்த்தங்களை மடிக்க வேண்டாம் என்பது குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்தித்தாளில் பயன்படுத்தப்படும் அச்சு மை - இல் பல்வேறு தீங்கு விளைவிக்கும் நிறமிகள், ரசாயனங்கள் மற்றும் ஈயம் போன்ற உலோகங்கள் உள்ளன. பொரித்த உணவுகளை செய்தித்தாள்களில் வைத்து பரிமாறுவது அல்லது பார்சல் செய்வது வெளியிலிருந்து பார்க்க பாதிப்பு இல்லாதது போல் தோன்றலாம். ஆனால் அவை தீவிரமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என தெரிவித்துள்ளது.
மேலும் செய்தித்தாள்கள் அச்சிடும்போதும், ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்க்கு கொண்டு செல்லப்படும்போதும், விநியோகிக்கப்படும்போதும் பெரும்பாலும் தூசி, அழுக்கு பட்டு தூய்மையற்றதாக மாறுகிறது. இதனால், அவை உணவை அசுத்தப்படுத்தி, உணவு வழியாக ஏற்படும் நோய்களை உருவாக்கும் அபாயம் இருக்கிறது.
இது மட்டுமன்றி செய்தித்தாளின் அச்சு மை இல் உள்ள வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்றால், செரிமானப் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம்கூட இருக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கருதுவதால் உணவுகளை செய்திதாள்களில் வைத்து கையாள வேண்டாம் என்று அறிவித்துள்ளது.