2025-ஆம் ஆண்டு பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தமுள்ள 243 இடங்களில் போட்டியிட்டு 202 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் 10-வது முறையாக பீகாரின் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். இந்த சூழலில்தான், இதுவரை கட்சியின் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்து வந்த நிதிஷின் ஒரே மகன் நிஷாந்த் குமார் தற்போது அரசியலில் நுழையவிருப்பதாக அம்மாநில அமைச்சரும், ஜே.டி.யு-வின் மூத்த தலைவருமான ஷ்ரவன் குமார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஏற்கெனவே, கடந்த தேர்தலில் நிஷாந்த் குமார் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் போட்டியிடவில்லை. ஆனாலும், நிஷாந்த் அரசியலில் களமிறங்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தள கட்சி வட்டாரங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இதுகுறித்து, கடந்த ஆண்டு நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா, ”கட்சி உறுப்பினர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் நிஷாந்த் குமார் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாம் அனைவரும் அதையே விரும்புகிறோம். ஆனால் அவர் எப்போது சேருவார் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இதுபோலவே, ஜே.டி.யு-வின் மூத்த தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் 75 வயதை எட்டிவிட்ட நிலையில், அவரின் உடல்நலம் குறித்தான விவாதங்கள் ஊடகங்களில் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அவர் பொது மேடைகளில் வித்தியாசமான நடத்தைகள் காரணமாக கடந்த தேர்தலின் போது, எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் இதை எடுத்துப் பேசின. இந்த சூழலில்தான், நிதிஷின் மகன் நிஷாந்தின் வருகை ஜே.டி.யு-க்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், நிஷாந்தை இதுவரை நிதிஷ் அரசியலுக்கு கொண்டு வராததற்கு முக்கியக் காரணம் ஒன்றும் இருக்கிறது.
அதாவது, பீகார் மாநில அரசியலில் நிதிஷின் முக்கிய ஆயுதமே, ’வாரிசு அரசியல் விமர்சனம்’தான். லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சி குறித்தும் ’வாரிசு அரசியல் செய்கிறது’ என்ற விமர்சனத்தை நிதிஷ் கடுமையாக முன்வைத்திருக்கிறார். இந்தச் சூழலில் தனது, மகனை அரசியலுக்கு கொண்டுவருவது ஐக்கிய ஜனதா தளம் மீதான விமர்சனங்களுக்கு வழிவகுக்கும் என நிதிஷ் கருதுவதாக கூறப்படுகிறது.
ஆனாலும், கடந்த தேர்தலே, பீகார் அரசியலில் இளைஞர்களுக்கான தேர்தலாக கருதப்பட்டது. லாலு பிரசாத் யாதவ் அரசியலில் இருந்து விலகிவிட்ட நிலையில், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ஆர்.ஜே.டி தேர்தலைச் சந்தித்தது. அதேபோல, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) - இன் சிராக் பஸ்வான், ஜன் சுராஜ் கட்சியின் பிரசாந்த் கிஷோர் போன்ற அடுத்த தலைவர் அரசியல்வாதிகள் தாக்கம் அதிகமாக இருந்தது. அதேசமயம், நிதிஷுக்கு கடந்த தேர்தலே கடைசித் தேர்தலாக இருக்கும் எனவும் பேசப்பட்டது. இந்த சூழலில், நிதிஷ் தன் மகன் நிஷாந்தை அரசியலுக்கு கொண்டு வரவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அமைச்சரும், மூத்த தலைவருமான ஷ்ரவன் குமார் இதுகுறித்து கூறுகையில், ”ஜே.டி.யு-வின் தொண்டர்கள் பல ஆண்டுகளாக நிஷாந்த் அரசியலுக்கு வரவேண்டும் எனக் கோரி வருகின்றார். அது இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நிஷாந்த அரசியலுக்கு வரவிருக்கிறார். இதுகுறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். மேலும், அவருக்கு கட்சியில் மிக முக்கியப் பொறுப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
நிதிஷ் குமாரின் ஒரே மகனான நிஷாந்த் குமார், அடிப்படையில் ஒரு பொறியாளர். இதுவரை அவர் பொது நிகழ்ச்சிகளிலோ அல்லது அரசியல் மேடைகளிலோ அரிதாகவே காணப்பட்டார். இதற்கிடையில், நிதிஷ் குமாருக்குப் பிறகு கட்சியை வழிநடத்த ஒரு வலுவான முகம் தேவை என்று கருதும் ஜேடியு நிர்வாகிகள், நிஷாந்த் குமாரின் வருகை கட்சிக்கு இளைய தலைமுறையினரிடையே புத்துயிர் அளிக்கும் என நம்புகின்றனர்.