இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமிக்கப்பட்டுள்ளார். 1986 முதல் கவசப் படையில் சேவை செய்து, சுதர்சன் சக்ரா கார்ப்ஸ் தளபதியாகவும் டெல்லி பகுதி கமாண்டராகவும் பணியாற்றியவர். ராணுவத்தின் உத்திசார் திட்டமிடல், நவீனமயமாக்கல் பணிகளில் முக்கிய பங்கு வகித்த இவர், பிரான்ஸ், அமெரிக்க ராணுவக் கல்லூரிகளில் பயிற்சி பெற்றுள்ளார்.
செய்தியாளர் ; M.மீரா
இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக, தற்பொழுது ராணுவத் துணைத் தளபதியாகப் பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் (Lt Gen Dhiraj Seth) நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ராணுவத் தளபதியான ஜெனரல் உபேந்திர திவேதி ஜூன் 30ஆம் தேதியுடன் பணி நிறைவு பெற்று ஓய்வு பெறுகிறார்.
இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை அன்று இந்த அதிகாரப்பூர்வ நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத், 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ராணுவத்தின் புகழ்பெற்ற கவசப் படைப் பிரிவில் (Armoured Corps - 2nd Lancers) அதிகாரியாகத் தனது ராணுவப் பயணத்தைத் தொடங்கினார்.
இவர் கடக்வாஸ்லாவில் உள்ள புகழ்பெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார்.
லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்தில் இருக்கும் போது , சுதர்சன் சக்ரா கார்ப்ஸ் (Sudarshan Chakra Corps) பிரிவை இவர் வெற்றிகரமாக வழிநடத்தினார். பின்னர், டெல்லி பகுதியின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் அதிகாரியாகப் பொறுப்பு வகித்து, பல முக்கியத் தேசிய மற்றும் சர்வதேச ராணுவ நிகழ்வுகளை முன்னின்று நடத்தினார்.
இந்திய ராணுவத்தின் தலைமையகத்தில் திறன் மேம்பாட்டுத் துறைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்த தீரஜ் சேத், ராணுவப் படைகளின் நவீனமயமாக்கல் மற்றும் வருங்காலப் போர்க்களத் தேவைகளுக்கு ஏற்ப படைகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
இந்தியாவில் மட்டுமன்றி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் ராணுவக் கல்லூரி மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்படை முதுகலை கல்லூரி ஆகியவற்றில் உயர்தர சர்வதேச ராணுவப் பயிற்சிகளை முடித்துள்ளார்.