கார்கே - மோடி PTI
இந்தியா

”தொகுதி மறுவரையறை 25 ஆண்டுகளுக்கு கூடாது” - மோடிக்கு கார்கே கடிதம்!!

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

Premkumar S

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதிகள் மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச தொகுதி மறுவரையறை மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் பாஜக அரசு தாக்கல் செய்தது. எனினும், இந்த மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வாக்களித்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்றக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை மீண்டு மத்திய அரசு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொண்டு வரப்படவில்லை.

மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா

இந்தச்சூழலில் தான், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடித்தத்தில், வரவிருக்கும் 2029 மக்களவைத் தேர்தலிலேயே பெண்களுக்கு 33 சதவீத (மூன்றில் ஒரு பங்கு) இடஒதுக்கீட்டை தாமதமின்றி அமல்படுத்த வேண்டும். மக்களவையின் தற்போதைய 543 தொகுதிகளின் எண்ணிக்கையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு உயர்த்தாமல் அப்படியே நிலைநிறுத்த வேண்டும் என கார்கே கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வரவுள்ள திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்க, அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என கர்கே கோரிக்கை வைத்துள்ளார். தொகுதி மறுவரையறை என்ற பெயரில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குப் பதிலாக, தற்போதிருக்கும் 543 தொகுதிகளிலேயே பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி உறுதியாக வலியுறுத்துவதாக கார்கே தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தில், அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் கேட்டறிந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்