bjp, eci x page
இந்தியா

தேர்தல் ஆணைய அறிக்கையில் பாஜக முத்திரை.. கேரளத்தில் வெடித்த சர்ச்சை.. சாடிய எதிர்க்கட்சிகள்!

கேரள பாஜக பிரிவின் முத்திரையுடன் கூடிய தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஒன்று இணையத்தில் வெளியானதை அடுத்து, சர்ச்சை வெடித்தது.

Prakash J

மாநில அரசியல் கட்சிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முத்திரைக்குப் பதிலாக பாஜகவின் கேரள முத்திரை பயன்படுத்தப்பட்டிருந்தது. இதை, சிபிஐ(எம்) சுட்டிக்காட்டியதை அடுத்து மாநிலம் முழுவதும் சர்ச்சை வெடித்தது.

நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், 140 சட்டசபை இடங்களைக் கொண்டிருக்கும் கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அம்மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், கேரள பாஜக பிரிவின் முத்திரையுடன் கூடிய தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஒன்று இணையத்தில் வெளியானதை அடுத்து, சர்ச்சை வெடித்தது. அதாவது, மாநில அரசியல் கட்சிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முத்திரைக்குப் பதிலாக பாஜகவின் கேரள முத்திரை பயன்படுத்தப்பட்டிருந்தது. இதை, சிபிஐ(எம்) சுட்டிக்காட்டியதை அடுத்து மாநிலம் முழுவதும் சர்ச்சை வெடித்தது. இதுகுறித்த அதன் பதிவில், “இந்தியத் தேர்தல் ஆணையத்தையும் பாஜகவையும் ஒரே அதிகார மையமே கட்டுப்படுத்துவதாகத் தெரிகிறது. குறைந்தபட்சம் இரண்டு தனித்தனி மேசைகள் என்ற கண்ணியத்தையாவது கடைபிடியுங்கள். முத்திரைகள் அலட்சியமாக மாற்றப்படுகின்றன. தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை.

eci letter

இது ஒரு புதுமையான விஷயம். வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரை ஒளிரும் என்ற கூற்றை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். ஆனால், பாஜகவும் தேர்தல் ஆணையமும் ஒரே முத்திரையைப் பயன்படுத்துவதுபோல் தோன்றுவது இதுவே முதல் முறை”என அது குற்றஞ்சாட்டி இருந்தது.

இந்த சர்ச்சை குறித்து காங்கிரஸும் எதிர்வினையாற்றி, தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடியது. “நீங்கள் பாஜகவின் அலுவலகத்தில் இருந்து செயல்படுகிறீர்களா? அவர்களின் முத்திரைகளை நீங்கள் எப்படிப் பெற்றீர்கள் அல்லது உங்கள் கடிதத் தலைப்பில் அனைத்துத் தேர்தல் அதிகாரிகளுக்கும் பாஜக அனுப்பிய கடிதமா இது” என்றும் அது கேள்வி எழுப்பியது.

eci in kerala

இவ்விவகாரம் மாநிலம் முழுவதும் பேசுபொருளான நிலையில், கவனக்குறைவால் நிகழ்ந்த எழுத்தரின் பிழை என தேர்தல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம், ”பாஜகவின் முத்திரையைக் கொண்ட தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஒன்று பல்வேறு மலையாள செய்தி சேனல்களில் பரப்பப்பட்டு வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. கவனக்குறைவின் காரணமாக, அலுவலகம் கட்சியின் முத்திரையைக் கவனிக்கத் தவறி, அதே ஆவணத்தை மற்ற அரசியல் கட்சிகளுக்கும் அறியாமல் விநியோகித்துவிட்டது. இது முற்றிலும் ஒரு எழுத்தர் பிழை. அது உடனடியாகக் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டது. ” எனத் தெரிவித்துள்ளது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக உதவிப் பிரிவு அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது. மேலும், அந்த ஆவணத்தை முறைப்படி திரும்பப் பெறுவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.