Musadik Malik Pt web
இந்தியா

சிந்துநதி நீர் விவகாரம் | "கைகளை வெட்டுவோம்" - இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை!

பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட நீரை இந்தியா தடுக்க முயன்றால், "அந்தக் கைகளை வெட்டிவிடுவோம்" என்று பாகிஸ்தான் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் (Musadik Malik) மாலிக் கடும் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Premkumar S

உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் 1960 இந்தியா பாகிஸ்தான் இடையே சிந்துநதி நீர் ஒப்பந்தம் Indus Waters Treaty (IWT) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே பாயும் நதிகளின் நீரை எவ்வாறு பகிர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது. இந்த ஒப்பந்ததின் படி, ராவி (Ravi), பியாஸ் (Beas) மற்றும் சட்லஜ் (Sutlej) ஆகிய கிழக்கு நதிகளை இந்தியா முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறது. அதே நேரத்தில் சிந்து (Indus), ஜீலம் (Jhelum) மற்றும் செனாப் (Chenab) ஆகிய மேற்கு நதிகளின் 80 சதவீத நதி நீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. மேலும், இந்த நதிகளின் நீரை நம்பியே பாகிஸ்தானின் பெரும்பாலான விவசாயம் இருக்கிறது.

சிந்து நதிநீர் விவகாரம்

இந்தச் சூழலில்தான், 2025-ஆம் ஆண்டு பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, தேசிய பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது. அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவை முழுமையாக கைவிடும் வரை இந்த நிலைப்பாடு தொடரும் என்றும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் பாகிஸ்தான் அதிகாரிகள், இந்தியாவுக்கு தொடர்ந்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் தான், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த, பாகிஸ்தானின் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக் மற்றும் பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் ஆகியோர் சிந்துநதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பேசியிருக்கின்றனர். குறிப்பாக, முசாதிக் மாலிக், "எங்களுக்குரிய நீரை யாராவது பறிக்க முயன்றால், அந்தக் கைகளை வெட்டிவிடுவோம். பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட நதிநீரை இந்தியா தடுக்க அனுமதிக்க முடியாது" என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து, அத்தாவுல்லா தரார் பேசுகையில், ”1960ல் இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்றும் நடைமுறையில் உள்ள சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் மூலம் எங்கள் மக்களுக்குத் தண்ணீருக்கான உரிமை உண்டு. இந்த ஒப்பந்ததை நிறுத்தி வைக்கும் நிலைபாட்டிற்கு சர்வதேச அளவில் ஆதரவு கிடைக்கப்படவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், நீர் பாதுகாப்பு பாதிக்கப்பட்டால் அது தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக மாறும் என்றும், தேவைப்பட்டால் இந்தியாவுக்கு எதிராக போர் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று எச்சரிந்திருந்த நிலையில், ”எங்களுக்குரிய நீரை யாராவது பறிக்க முயன்றால், அந்தக் கைகளை வெட்டிவிடுவோம்” என அந்நாட்டின் காலநிலை மாற்றத்துறை முசாதிக் மாலிக் பேசியிருப்பது இரு நாடுகளின் உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவை முழுமையாக கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்ட நிலையிலேயே தொடரும் என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.