மழை எக்ஸ் தளம்
இந்தியா

செப்டம்பரில் அதிகரிக்கப் போகும் மழை.. எச்சரிக்கையாக இருக்க வானிலை மையம் அறிவுரை!

செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Prakash J

செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மாதம் சராசரியாக 109% மழைப்பொழிவு இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

செப்டம்பரில் அதிகரிக்கப் போகும் மழை

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். முற்றிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம், சாலை பள்ளங்கள் மற்றும் விரிவான உள்கட்டமைப்பு சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பருவமழையின் இறுதிக்கட்டமானது வடமாநிலங்களுக்கு கடுமையான மழைப்பொழிவையும், மேலும் ஆபத்தான நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது.

கனமழை

வடஇந்திய மாநிலங்களுக்கு எச்சரிக்கை

அதன்படி, செப்டம்பர் மாத மழைப்பொழிவு, இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு மாதங்களில் நீண்ட கால சராசரியின் 109%ஐ விட அதிக மழைப்பொழிவு நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தவிர, அடுத்த இரண்டு வாரங்களுக்கு வட இந்தியா, மத்திய இந்தியா மற்றும் கங்கைச் சமவெளிப் பகுதிகளில் பரவலான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் வழக்கத்தைவிட குறைவாக மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. இந்த அதிக மழைப்பொழிவு விவசாயத்திற்கும் நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளன. எனவே, பொதுமக்கள் மற்றும் அதிகார அமைப்புகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த 4-5 ஆண்டுகளாக செப்டம்பர் மாத மழைப்பொழிவு அதிகரித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

இதுகுறித்து வானிலைத் துறையின் இயக்குநர் ஜெனரல் எம்.மொஹபத்ரா, ”இந்த மாதத்தில் நல்ல, இயல்பைவிட அதிகமான மழை பெய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது அவ்வப்போது மேகவெடிப்புகள், மண் சரிவுகள், நிலச்சரிவுகள் போன்ற நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும். பல ஆறுகள் உத்தரகண்டில் உருவாகின்றன. எனவே, கனமழை என்பது பல ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கும், மேலும் அது கீழ்நிலை நகரங்கள் மற்றும் நகரங்களை பாதிக்கும். இந்த அபாயங்களைத் தவிர்க்க கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்துவது மற்றும் பாதிக்கப்படக்கூடிய துறைகளில் வலுவான அமைப்புகளை நிறுவுவது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்தில் நல்ல, இயல்பைவிட அதிகமான மழை பெய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது அவ்வப்போது மேகவெடிப்புகள், மண் சரிவுகள், நிலச்சரிவுகள் போன்ற நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும்.
எம்.மொஹபத்ரா, வானிலைத் துறை இயக்குநர் ஜெனரல்
கனமழை எச்சரிக்கை

கடந்தகால பெய்த மழைஅளவு

1971-2020 தரவுகளின் அடிப்படையில், மாதாந்திர சராசரி 167.9 மில்லி மீட்டர்கள் ஆகும். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழை இதை முறியடித்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் 265 மில்லிமீட்டர் பதிவாகியுள்ளது. இது 2001க்குப் பிறகு அதிகபட்சம் மற்றும் 1901க்குப் பிறகு 13வது அதிகபட்சம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு தீபகற்பம் 2001க்குப் பிறகு அதன் மூன்றாவது அதிகபட்ச ஆகஸ்ட் மழையைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு உதாரணமாய் ஆகஸ்ட் 20 அன்று ராய்காட்டில் 440 மில்லிமீட்டரும், மத்திய மகாராஷ்டிராவின் மலைப்பகுதிகளில் 570 மில்லிமீட்டரும் பதிவாகியுள்ளன. அதேநேரத்தில், ஆகஸ்ட் 27 அன்று ஜம்முவின் உதம்பூர் மாவட்டத்தில் 630 மில்லிமீட்டர் மழை பெய்திருப்பதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 1 முதல், இந்தியா 743.1 மில்லிமீட்டர் மழையைப் பெற்றுள்ளதாகவும், இது நீண்டகால சராசரியான 700.7 மில்லிமீட்டரைவிட 6.1% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிராந்திய விநியோகம் கணிசமாக வேறுபடுகிறது. வடமேற்கு இந்தியாவில் 26.7% மழைப்பொழிவு பதிவாகியுள்ளது, கிழக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்கள் 17.8% பற்றாக்குறையை எதிர்கொண்டன. மத்திய இந்தியாவில் 8.6% மழைப்பொழிவும், தென்னிந்தியாவில் 9.3% மழைப்பொழிவும் பதிவாகியுள்ளன.