Petrol, Diesel Shortage web
இந்தியா

இந்தியாவில் எண்ணெய் தட்டுப்பாடே வராது.. மன்மோகன் சிங்கின் ’Master Stroke’! SPR எனும் பேராயுதம்!

இந்தியாவில் ஒருபோதும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. இதற்கான காரணங்கள் குறித்தும், இதன் பின்னணியில் இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிரடி முடிவு குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Praveen Joshva L

இந்தியாவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, மன்மோகன் சிங் தலைமையில், எண்ணெய் தட்டுப்பாடு வராமல் இருக்க 2004-ஆம் ஆண்டு ஒரு முக்கிய திட்டம் உருவாக்கப்பட்டது. இதனால், இந்தியா எண்ணெய் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து யுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால் உலகின் 40 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹர்மூஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் இதன் அறிகுறிகள் வெளிப்படையாகவே தெரிந்துவருகிறது. நாடு முழுவதும் LPG சமையல் எரிவாயுக்கு பற்றாக்குறை நிலவும் நிலையில், அடுத்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமா என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

ஆனால், இந்தியாவில் சமையல் எரிவாயு போல பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு வராது என்பது பலரும் அறியாத உண்மையாகும். இந்தியா தற்போது சுமார் 250 மில்லியன் பேரல்கள் அளவு கச்சா எண்ணெயை சேமித்து வைத்துள்ளது.

இந்தச் சேமிப்பு இந்தியாவின் ஒட்டுமொத்தத் தேவையை சுமார் 74 முதல் 80 நாட்கள் வரை அதாவது கிட்டத்தட்ட 2.5 மாதங்கள் வரை தடையின்றிப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டது. அந்த வகையில் உலகிலேயே அதிக அளவு கச்சா எண்ணெய்யை சேமித்து வைத்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. அதோடு, கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஒருவரைச் சார்ந்து இல்லாமல் அதனை பன்மைப்படுத்தியுள்ளது.

இப்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எடுத்த ஒரு முக்கியமான முடிவும் பெரும் காரணமாக அமைந்துள்ளது. 90களில் நடந்த வளைகுடா போர் மற்றும் இரண்டாயிரம் ஆண்டுகளின் தொடக்கத்தில் நடந்த அமெரிக்கா - தாலிபன் போர்ச் சூழலில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததோடு, அதற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது.

மன்மோகன் சிங்

இந்தச் சூழலில் இந்தியாவை அந்தப் பெரும் பாதிப்பில் இருந்து தப்பிக்க 2004-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் Indian Strategic Petroleum Reserves Limited என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் SPR என அழைக்கப்படும் விசாகப்பட்டினம், மங்களூரு மற்றும் பாடூர் ஆகிய இடங்களில் நிலத்தடிப் பாறைகளைக் குடைந்து பிரம்மாண்ட சேமிப்புக் கிடங்குகளை அமைத்தது. 5.33 மில்லியன் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்தக் கிடங்குகள் இந்தியாவின் சுமார் 9.5 நாட்கள் எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டது.

இந்த நிறுவனம் எப்போதெல்லாம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைகிறதோ, அப்போதெல்லாம் அதிகளவில் எண்ணெய்யை வாங்கி அதனை இந்தச் சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைத்துக்கொள்ளும். இதை தவிர இந்தியாவில் உள்ள IOCL, BPCL, HPCL போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எப்போதும் சுமார் 64 முதல் 70 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயைத் தங்கள் சொந்த டாங்கிகளிலும், சுத்திகரிப்பு நிலையங்களிலும் வைத்திருப்பார்கள். போர்ச் சூழலில் எண்ணெய் நிறுவனங்களின் இந்த கையிருப்பு காலியானால் மட்டுமே அரசு தன்னிடம் இருக்கும் SPR கையிருப்பை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்குவார்கள்.

கச்சா எண்ணெய்

இந்த SPR கையிருப்பை வெளியிட பிரதமர் தலைமையிலான அமைச்சரவை அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, இந்த SPR கையிருப்பை வெளியிடும் முன்னரே, அரசு கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவிடும்.

அதாவது, தற்போது வளைகுடா நாடுகளில் இருந்தே இந்தியா அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையில், இந்த 80 நாட்களுக்குள் இந்தியா வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்த எண்ணெய்யை இந்தியாவுக்கு கொண்டுவந்து விடும். இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

தற்போது LPG சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்குக் காரணம் கச்சா எண்ணெயைப்போல, சமையல் எரிவாயுவை அதிகளவில் சேகரித்து வைத்திருக்க முடியாததே முக்கிய காரணமாகும். பிரம்மாண்டமான குளிரூட்டப்பட்ட டாங்கிகளில் LPG சேமிக்கப்படும் நிலையில், அதில் இருந்தே பொதுப் பயன்பாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஆனால், நாம் சேமித்து வைத்திருக்கும் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிக்கும்போது, அதிலிருந்து ஒரு பகுதியாக LPG சமையில் எரிவாயு கிடைக்கும் என்பதால், அதன் உற்பத்தியை அதிகரிக்க தற்போதே எண்ணெய் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் சில நாட்களிலேயே LPG சமையல் எரிவாயு பற்றாக்குறையும் விரைவில் சரி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.