இப்ராஹிம், குமாரசாமி
இப்ராஹிம், குமாரசாமி கோப்புப் படம்
இந்தியா

கர்நாடகா: போர்க்கொடி தூக்கிய சி.எம்.இப்ராஹிம் அதிரடி நீக்கம்.. அடுத்த மஜத மாநில தலைவர் குமாரசாமி!

Prakash J

கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் அதிக தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில் இந்த தேர்தலில் பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் (மஜத) தோல்வியுற்றன. இந்த நிலையில்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, கடந்த மாதம் இணைந்தது. இதனை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் தேவகவுடாவும் உறுதிப்படுத்தினார். இதனால் மஜதவில் இருக்கும் இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அத்துடன், முக்கியத் தலைவர்கள் பலரும் அக்கட்சியில் இருந்து விலக ஆரம்பித்தனர்.

இந்நிலையில், மஜத மாநில தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சி.எம்.இப்ராஹிம், ”மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடகா மாநில தலைவர் நான்தான். கர்நாடகா மாநிலத்தில் கட்சியின் நலன் கருதி தாம் முடிவெடுக்க அதிகாரம் உண்டு. பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பதுதான் அந்த முடிவு. இந்த முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்ட ஒன்றுதான். இதற்குமேல் எதுவும் சொல்வதற்கு இல்லை. ஒருவேளை தேவகவுடாவும் குமாரசாமியும் பாஜகவுடன்தான் கூட்டணி அமைப்போம் என விரும்பி சென்றால் அவர்கள் போகட்டும். எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மஜத எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்க இருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இது, கர்நாடக அரசியலில் மட்டுமல்ல, மஜதவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பதிலளித்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, “”இப்ராஹிமின் அறிக்கைகளை நான் ஏன் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்? தயவுசெய்து அதுகுறித்த விஷயங்களை என்னிடம் விவாதிக்க வேண்டாம். இது, பதில் சொல்ல வேண்டிய விஷயமல்ல. எங்கள் கட்சி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். எது தேவையோ அதை நாங்கள் சரிசெய்வோம்” என பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், மஜத மாநிலத் தலைவர் பதவியில் இருந்து இப்ராஹிம் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் தேவகவுடா வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, அக்கட்சியின் தற்காலிக மாநிலத் தலைவராக குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மஜத மீண்டும் உடையும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னதாக, இன்றைய முதல்வராக இருக்கும் சித்தராமையா, மஜதவில் இருந்து விலகியபோதும் அக்கட்சி உடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நேற்று தீர்ப்பு.. இன்று நிச்சயதார்த்தம்: உச்சநீதிமன்றம் முன்பு மோதிரம் மாற்றிய தன்பாலின ஜோடி!