அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போரால் உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருவதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விலை அதிகமாகி பொருளாதார சிக்கல் நீடித்து வருகிறது.
இதனால், கச்சா எண்ணெய் சார்ந்த மூலப்பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள கடும் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக நுகர் பொருள் நிறுவனங்கள் தயாரிப்புகளின் விலையிலும், எடையிலும் மாற்றம் செய்து வருவதுடன், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைச் சமாளிக்கும் வகையில், நுகர்பொருள் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க தயாராகி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து சோப், பிஸ்கட், குளிர்பானங்கள் போன்ற பொருட்கள் விலை வரும் வாரங்களில் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உற்பத்திச்செலவு அதிகரிப்பின் எதிரொலியாக தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. எரிபொருள் விலையேற்றம் உற்பத்தி நிறுவனங்களை நேரடியாக பாதித்துள்ளது.
மேலும், பொருட்களை பேக்கேஜ் செய்வதற்கான செலவும் 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்துஸ்தான் யூனிலீவர், பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் விலை உயர்த்த முடிவு செய்துள்ளன. மேரிகோ, டாபர் போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே விலை உயர்வை அறிவித்துள்ளன. நெஸ்லே, டாடா கன்ஸ்யூமர் உள்ளிட்ட நிறுவனங்களும் விலை உயர்வுக்கு திட்டமிட்டுள்ளன. சில நிறுவனங்கள் விலையை உயர்த்தாமல் அளவை மட்டும் குறைத்து சமாளிக்க திட்டமிட்டுள்ளன.