ஜூபின் கார்க் எக்ஸ் தளம்
இந்தியா

பாடகர் ஜூபின் கார்க் மர்ம மரணம்.. சிங்கப்பூர் அரசின் உதவியை நாடும் அசாம் அரசு!

அசாமின் புகழ்பெற்ற பாடகர் ஜூபின் கார்க் சிங்கப்பூரில் மரணமடைந்த வழக்கில் மர்மம் நீடிப்பதால், அந்நாட்டு அதிகாரிகளின் உதவியை நாட அசாம் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Prakash J

அசாமின் புகழ்பெற்ற பாடகர் ஜூபின் கார்க் சிங்கப்பூரில் மரணமடைந்த வழக்கில் மர்மம் நீடிப்பதால், அந்நாட்டு அதிகாரிகளின் உதவியை நாட அசாம் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அஸாமி மட்டுமின்றி, வங்கம், இந்தி மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவர் ஜூபீன் கார்க். வடகிழக்கு மாநிலங்களிலேயே மிக அதிகம் சம்பளம் வாங்கும் இசைக்கலைஞராக அறியப்பட்ட ஜூபீன் கார்க், 1990களிலேயே தன் கலைப் பயணத்தைத் தொடங்கியவர். அனாமிகா எனும் இசை ஆல்பம் வாயிலாக, ’அசாமின் இதயத்துடிப்பு’ ஆனவர் ஜுபீன் கர்க். பாரம்பரிய அசாமிய நாட்டுப்புற இசையுடன், நவீன பாப் மற்றும் ராக் இசையையும் கலந்து அவர் உருவாக்கிய தனித்துவமான இசை, அசாமிய இசைக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்தது. தன் இசை வாழ்க்கையில் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் 32,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். அவரது நேரடி இசை நிகழ்ச்சிகள் உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களைக் கவர்ந்தன. இந்த நிலையில், சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அவர் அங்கு சென்றிருந்தபோது, நீச்சல் குள விபத்தில் உயிரிழந்தார்.

ஜூபின் கார்க் இறுதியஞ்சலி

சிங்கப்பூரிலே அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு இந்தியாவிற்கு வந்தது. ஆனால் அவரது மரணத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என மக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து இங்கும் இரண்டாவது முறை உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. அவரது மரணம் அசாமில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். இறுதியில், அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், அசாமின் புகழ்பெற்ற பாடகர் ஜூபின் கார்க் சிங்கப்பூரில் மரணமடைந்த வழக்கில் மர்மம் நீடிப்பதால், அந்நாட்டு அதிகாரிகளின் உதவியை நாட அசாம்மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு இந்தியா விழாவின் ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் ஜூபின் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா ஆகியோர் மீது குற்றவியல் சதி, கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அக்டோபர் 6ஆம் தேதிக்குள் கவுகாத்தியில் ஆஜராக CID சம்மன் அனுப்பியுள்ளது.

ஜூபின் கார்க்

மேலும், இந்த வழக்கில் சிங்கப்பூர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பைப் பெற, மத்திய அரசின் மூலம் சிங்கப்பூருடனான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை பயன்படுத்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அம்மாநில முதல்வர் அமைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஜூபினின் நண்பரும் இசைக்கலைஞருமான சேகர் ஜோதி கோஸ்வாமி கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார்.