ஏர் இந்தியா Pt web
இந்தியா

தாய்லாந்து | 133 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்து.. ஓடுதளம் மூடல்!

ஹைதராபாத்தில் இருந்து 133 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தாய்லாந்தின் புக்கெட் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் மோதி விபத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Premkumar S

ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி விமான நிலையத்திலிருந்து இன்று காலை 6.42 மணிக்கு 133 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர் IX 938 தாய்லாந்தின் புக்கெட் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இதைத் தொடர்ந்து, தாய்லாந்து நேரப்படி காலை 11.24 மணியளவில் புக்கெட் விமான நிலையத்தில் ஓடு பாதையில் தரையிறங்கியபோது, விமானத்தின் முன்புற பகுதியில் உள்ள சக்கரம் கழன்றதாக கூறப்படுகிறது.

புக்கெட் விமான நிலைய விபத்து

இதன்காரணமாக, விமானத்தின் முற்பகுதி மற்றும் ஓடுதளங்கள் கடுமையான சேதம் அடைந்தது. உடனடியாக புக்கெட் விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு விமானத்தில் இருந்த பயணிகள் மீட்கக்கூடிய பணி தொடங்கியது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த சூழலில்தான், புக்கெட் விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

விமான விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பு நெறிமுறைகளை புக்கெட் விமான நிலையம் பின்பற்றி வருவதாகவும் தாய்லாந்து விமானப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா தரப்பிலிருந்து, விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் விளக்கமளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, புக்கெட் விமான நிலையம் தரப்பில் இருந்து, ஓடுபாதை மீண்டும் இன்று மாலை 6 மணிக்கு திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விமான நிறுவனங்கள் தங்களது விமானங்கள் புறப்படத் துவங்குவதற்கு முன் அதன் நிலையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

அகமதாபாத் விபத்து

ஏற்கெனவே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திருந்தது குறிப்படத்தக்கது. விமான நிறுவனங்கள், பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தருவதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.