இந்தியாவில் முதன்முறை: 13 ஆண்டுகள் கோமாவில் இருந்தவருக்கு கருணைக்கொலை செய்ய ஒப்புதல்!
3 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபருக்கு கருணைக்கொலை (Passive Euthanasia) செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது இந்தியாவில் மிக முக்கியமான சட்ட தீர்ப்பாக பேசப்படுகிறது. இந்த தீர்ப்பு நீண்ட காலமாக குணமடைய வாய்ப்பில்லாமல் துன்பப்படும் நோயாளிகளுக்கான சட்ட வழிகாட்டியாக பார்க்கப்படுகிறது.
2013ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள கல்லூரி ஒன்றில், பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்தவர் ஹரிஷ் ராணா. அப்போது நான்காவது மாடியின் பால்கனியில் இருந்து விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, அவர் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். பிஜிஐ சண்டிகர், டெல்லி எய்ம்ஸ், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனை ஆகியவற்றில் விரிவான சிகிச்சைகள் அளி்க்கப்பட்டபோதிலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது குடும்பத்தினர் அவரை செவிலியர் உதவியுடன் வீட்டிலேயே வைத்து பராமரித்து வருகின்றனர். இதனால், அவருடைய குடும்பத்திற்குப் பெரிய அளவில் நிதி செலவாகிறது. தவிர, இதனால் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இதனால், அவரைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. ஏற்கெனவே 2018 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்தால் அந்தக் கோரிக்கை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது 3ஆவது முறையாக மனு அளிக்கப்பட்டது. அவர், குணமடைவதற்கான நம்பிக்கை இல்லை என்பதை உறுதிப்படுத்தும் புதிய மருத்துவ அறிக்கையைத் தொடர்ந்து இந்த மூன்றாவது மனு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த மனுவின் விசாரணையில், தற்போது ஹரிஷ் ராணாவைக் கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நாட்டில் நீதிமன்ற உத்தரவின் பேரில் செயலற்ற கருணைக்கொலை தொடர்பான முதல் வழக்கு இதுவாகும். நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இதற்கு உத்தரவிட்டுள்ளது. செயலற்ற கருணைக்கொலையின் சட்டப்பூர்வத் தன்மையை அங்கீகரித்த 2018 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பல அம்சங்களை தெளிவுபடுத்தி இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ராணாவை கவனித்துக்கொள்வதில் அவரது குடும்பத்தினர் நீண்ட காலமாகப் போராடியதையும் நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். மேலும், ஹரிஷ் ராணாவுக்கு வழங்கப்படும் உயிர் வாழும் மருத்துவச் சிகிச்சையை ரத்து செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் ஹரிஷ் ராணா கண்ணியத்துடன் இறக்க முடியும்.
இத்தீர்ப்பு குறித்து ஹரிஷ் ராணாவின் தந்தை அசோக் ராணா ANI-யிடம் பேசுகையில், "இந்தத் தீர்ப்புக்காக எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். இதற்காக நாங்கள் போராடி வந்தோம். எந்தப் பெற்றோர் தங்கள் மகனுக்கு இதை விரும்புவார்கள்? கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கை நாங்கள் தொடர்ந்தோம். இப்போது எங்கள் மகனைப் போலவே துன்பப்படும் மற்றவர்களுக்கும் நீதி கிடைக்கும்" என்றார்.
குணப்படுத்த முடியாத கடுமையான நோயால் அவதிப்படும் ஒருவர், வலியிலிருந்து விடுபட, மருத்துவர் உதவியுடன் தனது உயிரை முடிவுக்குக் கொண்டுவரும் செயல்முறை கருணைக்கொலை ஆகும். அதாவது, நோயாளியை கொல்ல மருந்து கொடுப்பதில்லை. ஆனால், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை நிறுத்துவது ஆகும். இதற்கு உலகளவில் ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. சில நாடுகளில் இது சட்டப்பூர்வமாக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் இது ’பேசிவ் யுத்தனேஷியா’ என்ற முறையில், மீளமுடியாத நோயாளிகளுக்கு, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்படுகிறது.

