புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாளை மறுநாளுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடையவுள்ளது. முன்னதாக, புதுச்சேரி முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, கடந்த மாதமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதை உறுதி செய்துவிட்டாலும், என்டிஏ கூட்டணியில் தொகுதிப்பங்கீடு மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ப்பதில் குழப்பம் நீடித்துவந்தது.
குறிப்பாக, கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணிக் கட்சிகளான பாஜக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் போட்டியிட்டன. இந்தச் சூழலில், இந்த முறை பாஜக அதிக இடங்களில் போட்டியிட தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் முன்பு போட்டியிட்ட 16 இடங்களிலேயே போட்டியிடும் முடிவில் என்.ஆர். காங்கிரஸ் திடமாக இருந்தது. மேலும் கூட்டணிக்குள் வேறு கட்சிகளைச் சேர்க்கும் முடிவுக்கும் என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்தச் சூழலில்தான் என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், பாஜகவுக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதிமுகவுக்கும், புது வரவான லட்சிய ஜனநாயக கட்சிக்கும் தலா இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கூட்டணி தர்மத்திற்காகவே, இரு தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளோம் எனவும் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறும் எனவும் புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ”புதுச்சேரியில் உப்பளம், உருளையன்பேட்டை ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 5 போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்திருந்தோம். இம்முறை கூட்டணி தர்மத்திற்காகவே 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளோம். வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார். அதேசமயம், நாங்கள் தர்மத்திற்கு அரசியல் நடத்தவில்லை. புதுச்சேரியில் அதிமுக ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு கேட்கும்; கண்டிப்பாக அமைச்சரவையில் அதிமுக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.