பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதில் 100 பேர் பலியாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு எல்லைகளிலும் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. முன்னதாக, இந்திய ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தானின் முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகமும், பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகமும் அழிக்கப்பட்டன. இவ்விடத்திலிருந்துதான் ஐ.நாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட மசூத் அசார் பலருக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். இவர், இந்தியாவின் பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்திய ராணுவத் தாக்குதலில் இவருடைய குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் 10 பேரும் மசூத்தின் உதவியாளர்கள் 4 பேரும் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், மசூத் அசாரின் தம்பி அப்துல் ரவூப் அசாரும் இந்திய ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தாக்குதலின்போது, தேடப்பட்டு வந்த அப்துல் ரவூப் அசார் காயமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், 1999-இல் நடத்தப்பட்ட கந்தஹார் விமானக் கடத்தலில் மூளையாகச் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1994ஆம் ஆண்டு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிலிருந்த மசூத் அசார் காஷ்மீரில் இந்திய அரசால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 1999, டிசம்பர் 24ஆம் தேதி, 190 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் காத்மாண்டிலிருந்து புறப்பட்ட ஐசி814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை 5 பயங்கரவாதிகள் கடத்தினர். அப்போது, மசூத் அசார் உள்பட 3 பயங்கரவாதிகளை விடுவிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, மசூத் அசார் விடுவிக்கப்பட்டார். விமானமும் மீட்கப்பட்டது. சகோதரர் மசூத் அசாரை மீட்க, அவரது சகோதரர் அப்துல் ரவூப் திட்டமிட்டு நடத்தியதே கந்தஹார் விமானக் கடத்தல் என்று கூறப்படுகிறது.
அப்துல் ரவூப் அசார் மற்றும் அவரது சகோதரரான மசூத் அசாரும்தான் இந்திய ராணுவ தலைமையகத் தாக்குதல், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தாக்குதல், டெல்லி நாடாளுமன்றத் தாக்குதல், பதான்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல், அயோத்தி கோயில் தாக்குதல் உள்ளிட்டவற்றுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் ஆவர். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியாக இருந்த அப்துல் ரவூப் அசார், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவராகவும் இருந்தார். இந்த நிலையில்தான், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ரவூப்பும் கொல்லப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
முஃப்தி அப்துல் ரவூப் அஸ்கர் என்றும் அழைக்கப்படும் அப்துல் ரவூப் அசார், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூரில் பிறந்தவர் ஆவார். அவரது சகோதரர் மசூத் அசார் இல்லாதபோது, ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மூளையாக ரவூப் இருந்துள்ளார். பெரும்பாலும் ரவூப், அவரது சகோதரரைப் போலல்லாமல், பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளார். ஆனால் ஜிஹாதி வட்டாரங்களுக்குள், அவர் கணிசமாகச் செயல்பட்டுள்ளார். இந்திய மண்ணில், மிக உயர்ந்த தாக்குதல்களை அமைதியாக நடத்திக்காட்டி வந்துள்ளார். 2002ஆம் ஆண்டு பாகிஸ்தான் முறையாக ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பை தடைசெய்த பிறகும், ரவூப் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். முன்னணி அமைப்புகள், தொடர்ச்சியான நிதி திரட்டும் முயற்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மூலம் குழுவின் செயல்பாடுகளை அவர் மேற்பார்வையிட்டு வந்துள்ளார்.
அதேநேரத்தில், பாகிஸ்தானுக்குள் அவர் சுதந்திரமாகவும் நடமாடியுள்ளார். அதாவது, பஹவல்பூர் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள பாதுகாப்பு மையங்களுக்கு இடையில், பாகிஸ்தானின் இராணுவ-உளவுத்துறை நிறுவனப் பாதுகாப்போடு சுற்றித் திரிந்துள்ளார். 2010ஆம் ஆண்டு, அமெரிக்க கருவூலத் துறை அப்துல் ரவூப் அசாரை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது. இருப்பினும், 2022ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் 1267 தடைகள் குழுவால் அவரை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா அழுத்தம் கொடுத்தபோது, கூடுதல் ஆதாரங்கள் தேவை என்று கூறி, அந்த நடவடிக்கையை சீனா தடுத்தது. சர்வதேச அழுத்தம் இருந்தபோதிலும், அடுத்தடுத்த பாகிஸ்தான் அரசாங்கங்கள் அவரைக் கட்டுப்படுத்த சிறிதும் முயற்சி செய்யவில்லை.