ஆபரேஷன் சிந்தூர் |தரைமட்டமான பயங்கரவாதி மசூத் அசார் வீடு.. உறவினர்கள் 14 பேர் பலி!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். 'ஆபரேஷன் சிந்தூர்' (சிந்தூர் என்றால் பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமப்பொட்டு என்ற அர்த்தமாகும். அதன் காரணமாகவே இந்தப் பெயரும் சூட்டப்பட்டு, அதற்கு இந்தியாவின் சிங்கப் பெண்ளே தலைமையேற்றிருந்தனர்) என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த தாக்குதலில், பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மௌலானா மசூத் அசார் வீடு இந்திய ஏவுகணைகளால் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் அவரது உறவினர்கள் 10 பேரும், அவருடைய உதவியாளர்கள் 4 பேரும் கொல்லப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அசார், “அதில் சிறு வருத்தமும் இல்லை” எனத் தெரிவித்ததாக பிடிஐ ஊடகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலால் சர்வதேச பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்ட 56 வயதான மசூத் அசார், 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 2008 மும்பைத் தாக்குதல்கள், 2016 பதான்கோட் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல் உட்பட இந்தியாவில் நடந்த பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர், பாகிஸ்தானில் இருப்பது ஊரறிந்த விஷயம் என்றாலும், அதை அந்நாடு மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.