ராகுல் காந்தி எக்ஸ் தளம்
இந்தியா

ராகுல் காந்தி பேச்சால் அமளி.. 2ஆவது நாளாக முடங்கிய அவை.. 8 எம்பிக்கள் இடைநீக்கம்!

ராணுவத் தளபதி புத்தக விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் 2ஆவது நாளாக அமளி நிலவியது.

Prakash J

முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே எழுதிய புத்தகத்தின் உண்மைத் தன்மையை தான் அங்கீகரிப்பதாக கூறி ராகுல் காந்தி இன்று காலை பேச்சை தொடங்கினார். ஆனால் இதுகுறித்து எதுவும் பேசக்கூடாது என அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். குடியரசுத் தலைவர்உரை மீதான தீர்மானம் தவிர வேறு எது குறித்தும் பேசக்கூடாது என அவைத்தலைவர் வலியுறுத்தினார்.

லடாக்கில் இந்திய ராணுவ நிலையை குறிவைத்து சீன ராணுவ பீரங்கிகள் அபாயகரமாக முன்னேறியதாக முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே எழுதியுள்ள புதிய நூல் ஒன்றை குறிப்பிட்டு ராகுல் காந்தி மக்களவையில் நேற்று பேசினார். அவரது பேச்சால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ச்சியாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை இந்த சர்ச்சை காரணமாக நேற்று மாலை முடங்கியது. பதிப்பிக்கப்படாத நூலை குறிப்பிட்டு பேசக்கூடாது என ராகுல் காந்தியை தடுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்களை அவைக்குறிப்பிலிருந்து நீக்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராகுல் காந்தி

இந்த நிலையில், முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே எழுதிய புத்தகத்தின் உண்மைத் தன்மையை தான் அங்கீகரிப்பதாக கூறி ராகுல் காந்தி இன்று காலை பேச்சை தொடங்கினார். ஆனால் இதுகுறித்து எதுவும் பேசக்கூடாது என அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். குடியரசுத் தலைவர்உரை மீதான தீர்மானம் தவிர வேறு எது குறித்தும் பேசக்கூடாது என அவைத்தலைவர் வலியுறுத்தினார்.

தேசப்பாதுகாப்பு குறித்து குடியரசுத் தலைவர் பேசியுள்ளதாகவும் அதுசார்ந்தே தானும் பேசுவதாகவும் ராகுல் பேசினார். எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் பேசுவதற்கு அனுமதி தேவையில்லை என ராகுல் விளக்கினார். அப்போது இரு தரப்பு உறுப்பினர்களும் கூச்சலிட்டதால் அவையில் அமளி நிலவியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆவணங்களை கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி எறிந்தனர். இதைத்தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக கூறி 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சீன ஊடுருவல் விவகாரம் குறித்து பேச ராகுல் காந்தியை அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சில எம்.பி.க்கள் ஆவணங்களை கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வீசினர். அவை விதிகளை மீறியதாக கூறி மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கடேசன், ஹிபி ஈடன்,அம்ரிந்தர் சிங், டீன் குரியகோஸ் உள்ளிட்ட உறுப்பினர்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சபாநாயகர் இடைநீக்கம் செய்தார். இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. சபாநாயகரின் முடிவை எதிர்த்து ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.