இந்தியாவில் வங்கி மோசடிகள் எண்ணிக்கை குறைந்தாலும், மோசடி தொகை அதிர்ச்சிகரமாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தரவு காட்டுகிறது. 2025-26ல் 10,114 வழக்குகளில் ரூ.48,021 கோடி மோசடி நடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரே நிதியாண்டில் சுமார் 48 ஆயிரத்து 21 கோடி ரூபாய் அளவுக்கு வங்கி மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அதிரவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 46 சதவீதம் அதிகமாகும். மோசடிகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், மோசடி செய்யப்பட்ட தொகை பெருமளவு உயர்ந்துள்ளது. 2023-24 நிதியாண்டில் 35 ஆயிரத்து 800 மோசடிகள் நடந்தபோது, 11 ஆயிரத்து 13 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.
2024-25 நிதியாண்டில் 23 ஆயிரத்து 722 மோசடிகள் நடந்தபோது, 32 ஆயிரத்து 803 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இந்நிலையில் 2025-26 நிதியாண்டில் 10 ஆயிரத்து 114 மோசடிகளாக குறைந்துள்ளபோது, மோசடி செய்யப்பட்ட தொகை 48 ஆயிரத்து 21 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 35 ஆயிரத்து 709 கோடி ரூபாய் அளவுக்குப் பெரும் மோசடி நடந்துள்ளது. இது மொத்த மதிப்பில் 74.50 சதவீதமாகும். இதேபோல், தனியார் வங்கிகளில் 11 ஆயிரத்து 399 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது.
ஆன்லைன் மற்றும் ஏடிஎம் கார்டு மோசடிகள் பெருமளவு குறைந்துள்ள வேளையில், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மூலமாகவே இந்த மெகா மோசடி அரங்கேறியுள்ளது.