கார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகும்பட்சத்தில், பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. மேலும், நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தமுள்ள 243 இடங்களில் போட்டியிட்டு 202 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் அக்கூட்டணியே ஆட்சியமைத்தது. 10-ஆவது முறையாக பீகாரின் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். இந்த நிலையில், நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவும் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைய இருப்பதால், நிதிஷ் குமார் அதற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே, பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகும்பட்சத்தில், பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. மேலும், நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், பீகாரில் நிதிஷ் குமாருக்குப் பிறகு யார் முதலமைச்சராக வருவார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பாஜகவுக்குள் பல பெயர்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பீகாரில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முன்னணியில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி பரவலாகப் பேசப்படுகிறார். குஷ்வாஹா ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவரான சவுத்ரி, கடந்த சில ஆண்டுகளாக கட்சி அமைப்பு மற்றும் மாநில அரசாங்கத்திற்குள் தனது அரசியல் நிலைப்பாட்டை படிப்படியாக வலுப்படுத்தி வருவதாலேயே அவர் முக்கியமான முதல்வர் வேட்பாளராகக் கருதப்படுகிறார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் அவரது பங்கும், நிதிஷ் குமாருடன் நெருக்கமாகப் பணியாற்றிய அனுபவமும் அவரது நிர்வாகச் சான்றுகளை உயர்த்தியுள்ளன.
இன்னொரு புறம், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பெயரும் பரவலாக அடிபடுகிறது. பாஜகவில் ஒரு முக்கிய யாதவத் தலைவரான ராய், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ் பல ஆண்டுகளாக இளநிலை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். எதிர்க்கட்சிகளின் முக்கிய ஆதரவுத் தளமாக பாரம்பரியமாகப் பார்க்கப்படும் யாதவ சமூகத்திற்கு அவரது பதவி உயர்வு ஒரு சக்திவாய்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்தச் சமூகம், நீண்டகாலமாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களுடன் அரசியல் ரீதியாக இணைந்துள்ளது. எனவே, யாதவ் இனத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக நியமித்தால், எதிர்கால தேசியத் தேர்தல்களுக்கு வலுவானதாக அமையும் என பாஜக கணக்கிடுகிறது. அதன் காரணமாகவே ராய் பெயரும் அடிபடுகிறது.
சவுத்ரி மற்றும் ராயைத் தவிர, பீகார் அமைச்சரும் முன்னாள் மாநில பாஜக தலைவருமான திலீப் ஜெய்ஸ்வாலும் ஒரு சாத்தியமான போட்டியாளராக விவாதிக்கப்படுகிறார். வைஷ்ய (கல்வார்) சமூகத்தைச் சேர்ந்த ஜெய்ஸ்வால், ஒப்பீட்டளவில் மிதமான மற்றும் நிறுவன ரீதியாக நம்பகமான தலைவராகக் கருதப்படுகிறார். இவர்களைத் தவிர, பாட்னாவின் திகா தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சஞ்சீவ் சௌராசியாவின் பெயரும் அடிபடுகிறது. எனினும், பாஜக எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும். இதற்கிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) தலைவர் ஜிதன் ராம் மஞ்சி, தனது கட்சித் தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் மாலை 6.30 மணிக்கு ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.