மனைவியை கொன்ற கணவன்
மனைவியை கொன்ற கணவன் புதியதலைமுறை
குற்றம்

மயிலாடுதுறை: குழந்தை இல்லையெனக் கூறி தகராறு.. மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற கணவன்!

PT WEB

செய்தியாளர் - மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாமாக்குடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கேசவன்(32). கூலித் தொழிலாளியான இவருக்கும் பிள்ளைபெருமாள் நல்லூர் ஊராட்சி வேப்பஞ்சேரியை சேர்ந்த மகாலட்சுமி(36) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையே, தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கேசவனும் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துவந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம்போல நேற்று நள்ளிரவு நேரத்தில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்ற கேசவன், மனைவி மகாலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, அருகில் கிடந்த கட்டையை எடுத்து அடித்ததில், படுகாயம் அடைந்த மகாலட்சுமி உயிருக்கு போராடியுள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மகாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்களோ, மகாலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த பொறையார் போலீசார் விரைந்து சென்று, மனைவியை அடித்துக்கொலை செய்த கேசவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மது போதையில் மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.