ஆறு பேர் கைது pt desk
குற்றம்

கர்நாடகா: இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்த 40 வயது நபர் அடித்துக் கொலை - 6 பேர் கைது

கர்நாடகாவில் 20 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த 40 வயது நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பெண்ணின் குடும்பத்தினர் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே கோணனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (40). இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேறு சமூகத்தைச் சேர்ந்த ஷில்பா என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறில் ஷில்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக, மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்த 40 வயது நபர்

இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த மஞ்சுநாத்திற்கும், அவரது சமூகத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இருப்பினும், வயதை காரணம் காட்டி இளம் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன் மஞ்சுநாத்தும் அந்த இளம்பெண்ணும் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அப்போது கோயிலுக்குச் சென்ற இளம் பெண்ணின் பெற்றோர் முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறி, இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பின் நேற்று மஞ்சுநாத்தின் வீட்டிற்குச் சென்ற இளம்பெண்ணின் உறவினர்கள் மஞ்சுநாத், அவரது தந்தை சந்திரப்பா, தாய் அனுசுயா ஆகியோரை மரக்கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

ஆறு பேர் கைது

இதில், தலையில் பலத்த காயமடைந்த மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பெற்றோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக, பரமசாகரா போலீசார், 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ஆறு பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.