நடுக்கடலில் தவித்த மீனவர்கள்.. துரிதமாக மீட்கப்பட்டு கரைக்கு திரும்பியது எப்படி?
செய்தியாளர் ஸ்ரீதர்
கடலூர் அருகே நடுக்கடலில் கப்பல் இறங்குதளத்தில் தவித்த 6 மீனவர்கள் உட்பட பத்து பேர், புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக துரிதமாக மீட்கப்பட்டு கரைக்கு திரும்பியுள்ளனர்.
தைகால் தோணித்துறை பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் 2 ஃபைபர் படகுகள் மூலம் கடலுக்குள் சென்ற நிலையில், கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்தனர். அங்குள்ள தனியார் ரசாயனத் தொழிற்சாலைக்கு சொந்தமான கப்பல் இறங்குதளத்திற்கு சென்று அவர்கள் உயிர்தப்பினர். கடல் சீற்றம் காரணமாக, அப்பகுதிக்கு படகில் சென்று வருவது சிரமம் என்பதால், புயல் கரையை கடக்கும் வரை மீனவர்கள் ஆறு பேரும் கப்பல் இறங்குதளத்திலேயே இருப்பார்கள் என மீன்வளத்துறை சார்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கப்பல் இறங்குதளத்தில் 2 நாட்களாக தவிக்கும் மீனவர்களை தொலைபேசி வாயிலாக புதிய தலைமுறை தொடர்பு கொண்டது. அப்போது, கடல் சீற்றம் குறைவாகவே இருக்கிறது என்றும் உடனடியாக தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, இரண்டு நாட்களாக சிக்கித் தவித்த மீனவர்கள் 6 பேரையும் கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கடற்படை ஹெலிகாப்டரில் ஒருமுறைக்கு 3 பேர் வீதம் ஆறும் பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.
6 மீனவர்கள் மட்டுமின்றி கப்பல் இறங்குதளத்தில் இருந்த பணியாளர்கள் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி மீனவர்கள் கடலுக்குச்செல்ல வேண்டாம் என்று ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். கப்பல் இறங்குதளத்தில் 2 நாட்களாக தவித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டதையடுத்து ஹெலிகாப்டர் திரும்பிச்சென்றது.