சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய ‘கருப்பு’ படம் மே 15 வெளியானது முதல் வசூலில் வெற்றி குவித்து வருகிறது. கருப்பசாமி எல்லைத் தெய்வமாக, சாதி மத எல்லை இல்லாமல் அனைவரும் வணங்கும் சாமி என்பதால், மக்கள் தங்களுடைய சாமியாக நினைத்து தியேட்டரில் திருவிழா போல கொண்டாடுவதாக பாலாஜி கூறுகிறார். குடும்பங்களுக்காக எடுத்த படம் என்பதால் மக்களின் வரவேற்பே முக்கியம் என வலியுறுத்துகிறார்.
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். மே 15ம் தேதி வெளியான படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்து அசத்தி வருகிறது. வசூலிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை ஒவ்வொரு ஊரிலும் சென்று பார்க்கும் டூரை இன்று துவங்கியுள்ளார் ஆர் ஜே பாலாஜி.
இன்று திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் சென்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார் "எனக்கு சாமி பக்தி அதிகம். மக்களுக்கும் பக்தி அதிகம் என தியேட்டரில் பார்க்கையில் தெரிகிறது. இரண்டு சாமி படம் செய்திருக்கிறேன். நல்ல படம் செய்தால் மனதில் நின்றுவிடும் என நினைக்கிறேன். மற்ற கதைகளும் இருக்கிறது. இப்போதைக்கு ஒரு சாமி படம் செய்ததில் எனக்கு சந்தோசம் தான். கருப்பசாமி நம் ஊருடைய எல்லைச் சாமி. சாதி மதம் எல்லாம் கருப்பசாமிக்குக் கிடையாது. எந்த ஊராக இருந்தாலும், ஊரை விட்டு வெளிய போகும் போதோ, ஊருக்கு வரும் போதோ கருப்பசாமியை வணங்கிட்டுதான் செல்வார்கள். அப்படி மக்கள் அனைவரும் அவங்களுடைய சாமியாக நினைத்து படத்தை வந்து பார்த்து, கொண்டாடுவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
குடும்பங்களாக வந்து பார்க்கிறார்கள். அவர்களுக்காக தான் படம் செய்ததே. விமர்சனம் செய்பவர்களுக்கு, ஆன்லைனில் இருப்பவர்களுக்கு நான் படம் செய்யவில்லை. இதை நான் பட ரிலீஸ்க்கு முன்னாடியே கூறினேன். இது மக்களுக்குப் பண்ணின படம். எனவே, மக்களுக்கு பிடிக்கும் அவர்கள், இந்தப் படத்தைக் கொண்டாடுவார்கள் என எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. இன்று தியேட்டரிலும் அதுவே நடக்கிறது. தியேட்டரே ஒரு மாயாஜாலம் போல இருக்கிறது. திருவிழா போல இருக்கிறது. சில பேர் படத்தின் தயாரிப்பு நிறுவனமே தியேட்டரில் சாமி ஆடுறவதற்கு ஆள் அனுப்பிடுவார்கள் என சொன்னார்கள். எங்களாலேயே இவ்வளவு பட்ஜெட் செலவு பண்ணி ஆள் அனுப்பியிருக்க முடியாது. அது படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாகி இருக்கும். மக்களே இந்த படத்தை அவர்களுடைய படமாக நினைத்து கொண்டாடுவதுதான் ரொம்ப ஸ்பெஷலாக மாறியிருக்கு." என்றார்.