"நான் எருமை மாடு; அவர் கன்றுக்குட்டி.." ஆர் ஜே பாலாஜி குறித்து மிஷ்கின் | Mysskin | R J Balaji
பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, நடித்துள்ள படம் `பரிமளா & கோ'. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மிஷ்கின். இப்படம் தொடர்பான பேட்டி ஒன்றில் ஆர் ஜே பாலாஜி ’கருப்பு’ பட வெற்றிக்குப் பின் தியேட்டரில் உணர்ச்சி வசப்பட்டது குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதில் சொன்ன மிஷ்கின், "நான் எருமை மாடு மாதிரி, எதையும் கண்டுகொள்ள மாட்டேன். அவர் இப்போதுதான் கன்றுக்குட்டி என நினைக்கிறேன். அதனால்தான் துள்ளல் ஜாஸ்தியாக இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று படங்களுக்குப் பிறகு அவரும் எருமை ஆகிவிடுவார். தோல் தடிமனாகிவிடும். என்னுடைய முதல் படம் வெளியாகவே ஒரு வருடம் ஆனது. முதல் நாள் 8 பேர்தான் படம் பார்த்தார்கள். பின்னர் 16, 32 எனக் கூடிய போதே படத்தைத் தூக்கிவிட்டார்கள். 27 பெட்டிதான் போட்டோம், மொத்தமும் அலுவலகத்துக்கு வந்துவிட்டது.
அதில் ஒரு பெட்டி மட்டும் க்ரவுன் தியேட்டரில் ஓடி பேசப்பட்டது, பிரபலமான பிறகு படம் ஓடியது. அதற்கு முன்பு படமே எடுக்க தெரியல எனச் சொன்னவர்கள், ஓடிய பிறகு கைகட்டி நின்றார்கள். பின்னர் ’நந்தலாலா’, ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திலும் இப்படி நடந்தது. எனவே, எனக்கு தோல் தடிமனாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் படம் வெளியாகும்போது நான் இங்கேயே இருக்க மாட்டேன். எங்காவது காட்டுக்குச் சென்று புத்தகம் படிப்பேன். 3 மணிக்கு மேல்தான் படத்தின் நிலையையே விசாரிப்பேன்.
நாங்கள் எல்லாம் ஏன் பாலாஜியின் வெற்றிபார்த்து மகிழ்ந்தோம் என்றால், அவன் வேறு ஒரு துறையிலிருந்து சினிமாவுக்கு வந்து நடித்து, இயக்குநராகி பெரிய ஹீரோ படத்தை எடுத்திருக்கிறான். அதிலும் சில சரிவுகளைச் சந்தித்த ஒரு ஹீரோ. பெரிய ஹீரோ படம் ஓடவில்லை என்றால், அது சினிமாவையே பாதிக்கும்.
மிகத் திறமையான நடிகருக்கே அப்படி ஆகிறது என்கிறபோது, இந்தப் பட வெளியீட்டுக்கு இரு நாட்கள் முன்பு நான் பலருக்கும் கால் செய்து இப்படம் பற்றி விசாரித்தேன். ஜெயிப்பான் என அவன் அழுதபோதே எனக்குத் தெரிந்துவிட்டது. சினிமா ஒவ்வொருவரையும் அப்படித்தான் உலுக்கிப் பார்க்கும். கடைசியில் தியேட்டரில் அவனது உணர்ச்சியைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.

