Urvashi Body Shaming
கோலிவுட் செய்திகள்

"அவர் சொன்னதும் கண்கலங்கிவிட்டேன்!" - உருவ கேலி பேச்சு பற்றி ஊர்வசி | Urvashi

இப்போதெல்லாம் யாரையும் உருவகேலி செய்ய முடியாது. ஆனால் ஆரம்ப காலங்களில் அதற்கு எதிராக நிறையவே போராட வேண்டி இருந்தது.

Johnson

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடித்துள்ள படம் `பரிமளா & கோ'. இப்படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படம் தொடர்பான பேட்டி அளித்துள்ளார் ஊர்வசி. அப்போது உருவ கேலி செய்யப்படுவது பற்றிய பேச்சு வர, அதை பற்றி தன் கருத்தை பகிர்ந்து கொண்டார் ஊர்வசி. அதில் "இப்போதெல்லாம் யாரையும் உருவகேலி செய்ய முடியாது. ஆனால் ஆரம்ப காலங்களில் அதற்கு எதிராக நிறையவே போராட வேண்டி இருந்தது. தடியன், நொண்டி, செவிடு என இப்படி பரிகாசம் செய்வதற்கு எதிராக நிறைய பேசி இருக்கிறேன்.

Urvashi

சினிமாவை தாண்டி தனிப்பட்ட முறையிலும் பேசி இருக்கிறேன். அப்படியான செயல் வரவேற்கத்தக்கதல்ல. சில நடிகைகளை திருமணத்துக்கு பிறகு நான் கவனித்திருக்கிறேன். எடைபோட்டுவிட்டது தெரியக் கூடாது என்ற கவனத்துடன் அதனை புடவை வைத்து மறைத்துக் கொண்டே போவார்கள். இதை பற்றி பேசுவார்கள் என்ற பயம் தான் அதற்கு காரணம். அதெல்லாம் மாற்றப்பட வேண்டி விஷயங்கள். முதலில் எனக்கு இப்படியான விஷயங்கள் எனக்கு தெரியாது. நாமும் கூட துவக்கத்தில் கிண்டலாக சிரித்திருப்போம்.

ஒருகட்டத்தில் நானும் குமரிமுத்து அண்ணனும் ஒரு படம் நடித்தோம். அப்போது அந்த இயக்குநர் என்னிடம் `நீயும் அவர் மாதிரி கண்ணை வைத்துக் கொண்டு நடி' என்றார். நானும் நடித்தேன், அதை பார்த்து பலரும் சிரித்தார்கள். இதுநடந்து சில காலம் கழித்து நான் அவரை பேட்டி எடுத்தேன்.

Kumarimuthu

அவரது ஆசைகள் பற்றி கேட்ட போது `எனக்கு போலீஸ் ஆக வேண்டும் என ஆசை, ஆனால் என்னுடைய கண் அதற்கு தடையாகிவிட்டது. டிரைவிங் கற்க செல்லும் போது கூட ஏளனமாக பேசுவார்கள்' என அவர் சொல்ல சொல்ல எனக்கு அழுகை வந்துவிட்டது. ஒரு கட்டத்தில் `நீ கூட என்ன மாதிரியே கண்ண மாத்தி வெச்சு நடிச்சேல்ல; என்றதும் எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. உடனே வெளியே சென்றுவிட்டேன். மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வெகுநேரம் ஆனது. அன்றிலிருந்து இனி யாரையும் கிண்டல் செய்யக்கூடாது என முடிவு செய்தேன்.