"அந்த வசனத்தை பேச மறுத்த சூர்யா..." - ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த தகவல்
நானும் ரௌடிதான் படத்தில் அஞ்சான் குறித்து தானே பேசிய கிண்டல் வசனத்தால் ஏற்பட்ட குற்ற உணர்வை சரிசெய்ய, கருப்பு படத்தில் சூர்யாவை வைத்து அதற்கு ஈடுகட்டும் வசனம் பேச வைக்க முயன்றதாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார். ஆனால் “மற்றவர்களின் படத்தை நான் எப்படி கலாய்ப்பது?” என்று சூர்யா மறுத்து, காட்சியை முழுவதும் நீக்கச் சொன்னார். இதன் மூலம் சூர்யாவின் நற்பண்பை பாலாஜி பாராட்டியுள்ளார்.
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். மே 15ம் தேதி வெளியான படத்துக்கு வசூலும், வரவேற்பும் மிக பெரிய அளவில் கிடைத்துள்ளது. நானும் ரௌடிதான் படத்தில் அஞ்சான் படத்தை கிண்டல் செய்து வசனம் பேசி இருப்பார் ஆர் ஜே பாலாஜி. அதனை ஈடுகட்டும் வகையில் `கருப்பு' படத்தில் சூர்யாவிடம் ஒரு வசனத்தை பேச வைத்தது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் "அதை நாங்கள் மிகவும் கட்டாயப்படுத்தினோம். அவர் பேசவே மாட்டேன் என சொல்லிவிட்டார். நான் நடித்த வேறு படங்களில் பெயரை கூட சொல்லி பேச சொன்னேன். அதுவும் முடியாது என சொல்லிவிட்டார். அந்த காட்சியையே தூக்க சொல்லிவிட்டார். `ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாம்மா' என்ற வார்த்தை சூர்யா சாருக்கு அப்படியே பொருந்தும். அவர் அவ்வளவு நல்லவர். இன்னொருத்தர் படத்தை நான் எப்படி கலாய்ப்பது என்று மறுத்தார். மூக்குத்தி அம்மன் நான் எடுத்த படம் தான் சார் பேசுங்கள் என்றேன். மூக்குத்தி அம்மன் மூணு டிக்கெட் இருக்கு என அவர் சொன்னதும் தியேட்டரே தெறிக்கிறது.
இத்தனைக்கும் அந்தப் படம் ஓடிடியில் வந்த படம். ஆனால் அந்தக் கேள்வி வராது என நினைத்தேன். பார்க்கும் போது சிரித்து கைதட்டுவார்கள். பின்னர் அது ஓடிடியில் வந்தது பற்றி யோசிப்பார்கள். அவ்வளவுதான் அதனுடைய லாஜிக். இதை வைத்தே ஆகவேண்டும் என்று நான் நினைக்க காரணம் `அஞ்சான் படத்துக்கு அஞ்சு டிக்கெட் இருக்கு வர்றியா' என்ற வசனத்தை நான் சொன்னேன். நானே அவரை வைத்து படம் எடுக்கிறேன் எனும்போது பழசை எப்படி அழிக்க முடியும்? இப்படி ஏதாவது செய்துதான் ஈடுகட்ட முடியும். சில விஷயங்களை எல்லாம் இருந்தே ஆக வேண்டும் என பிடிவாதமாக இருப்பேன் என்று கூறினார்.

